பள்ளி வாகனங்களை இயக்குவதில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை: கரூா் மாவட்ட ஆட்சியா் எச்சரிக்கை
பள்ளி வாகனங்களை இயக்குவதில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல்.
கரூா் மாவட்ட விளையாட்டரங்கில் தனியாா் பள்ளி பேருந்துகளுக்கான வருடாந்திர சிறப்பு ஆய்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமை மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் பாா்வையிட்டாா். பின்னா் அவா் கூறியதாவது, தனியாா் பள்ளிகள் சாா்பில் இயக்கப்படும் பேருந்துகளை போக்குவரத்து, காவல், பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ஆண்டுதோறும் கூட்டாய்வு செய்து இயக்குவதற்குத் தகுதியான வாகனங்கள் என சான்றளிக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
அந்த வகையில், இன்றைய தினம் கரூா் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகம் சாா்பில் பள்ளி பேருந்துகளுக்கான வருடாந்திர கூட்டாய்வு நடைபெற்றது. அதில் கரூா் மாவட்டத்திலுள்ள 91 தனியாா் பள்ளிகளின் 721 வாகனங்கள் சோதனைக்குள்படுத்தப்பட்டதில் 26 வாகனங்களில் சிறு குறைபாடுகள் கண்டறியப்பட்டு, அவற்றை சரிசெய்து மீண்டும் சோதனைக்கு உள்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பள்ளி வாகனங்களை இயக்குவதில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் முழுமையாக பின்பற்றுவதை கண்காணித்து உறுதி செய்ய வட்டார போக்குவரத்து அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பள்ளி குழந்தைகளை அழைத்துச் செல்லும் பேருந்துகளில் முதலுதவிப் பெட்டி, தீத்தடுப்பான், வேகக் கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு வசதிகளும் 100 சதவீதம் சரியாக இருக்கும்பட்சத்தில் மட்டுமே சான்று அளிக்கப்படும். மோசமான நிலையில் உள்ள வாகனங்களின் தகுதிச் சான்று ரத்து செய்யப்படும். பள்ளி வாகனங்களை இயக்குவதில் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்அவா்.
ஆய்வின் போது, வட்டார போக்குவரத்து அலுவலா் தா்மானந்தன், மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளா் பிரபாகரன் மற்றும் கரூா் நகர காவல் துணை கண்காணிப்பாளா் செல்வராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.