பார்வைத் திறன் குறைபாடுடையோரும் நீதிபதிகளாக நியமிக்கப்படத் தகுதியுடையவர்கள்! -உச்சநீதிமன்றம்
பார்வைத் திறனற்ற மாற்றுத்திறனாளிகளும் நீதிபதிகளாகத் தகுதியுடையோரே என்பதை மீண்டும் ஒருமுறை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. உடல் குறைபாட்டை காரணம்காட்டி நீதியியல் துறையில் எந்த்வொரு நபருக்கும் பணி வாய்ப்பு மறுக்கப்படக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் கண் பார்வைத் திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, தான் நீதிபதியாக தகுதியிருந்தும் தமது குறைபாட்டால் நீதியியல் துறையில் விண்ணப்பிக்க தகுதியில்லை என்று நிராகரிக்கப்பட்ட மனுதாரரின் தாயார், இது குறித்து முன்னாள் தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட்டுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், பொதுநல மனுவாக இந்த விவகாரத்தை விசாரிக்க கோரிக்கை விடுத்திருந்தார்.
பார்வைத்திறனற்ற மாற்றுத்திறனாளிகள் நீதித்துறை சேவைகளில் நீதிபதிகளாகவும் இதர பொறுப்புகளிலும் நியமிக்கப்படுவதை தடை செய்யும் ‘மத்திய பிரதேச அரசுத் துறை சேவைகள் தேர்வுகள் விதிகள்(ஆள்சேர்ப்பு) 1994’-இல் உள்ள விதி 6(ஏ)-ஐ எதித்து தாக்கல் செய்யப்பட்ட மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே. பி. பர்திவலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று(மார்ச் 3) பிறப்பித்துள்ள உத்தரவில், ‘நீதியியல் துறை பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஒருவரது உடல் குறைபாட்டை காரணம் காட்டி அவரை தடை செய்ய இயலாது’ என்று சுட்டிக்காட்டியுள்ளது.
நீதிபதிகள் கூறியிருப்பதாவது:- “குறைபாடுடைய மனிதர்கள் நீதியியல் துறையில் எந்தவித பாகுபாட்டையும் எதிர்கொள்ளக் கூடாது. இதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். உடல் குறைபாடு காரணமாக எந்தவொரு விண்ணப்பதாரருக்கும் வாய்ப்பு மறுக்கப்படக் கூடாது” என்று தெரிவித்துள்ளனர்.