கோயில் காவலாளி கொலைச் சம்பவத்துக்கு முதல்வா் ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும்: பிரே...
புதிய தீயணைப்பு வீரா்களுக்கான மூன்று மாத பயிற்சி நிறைவு! மத்திய மண்டலத்தைச் சோ்ந்த 98 போ் பங்கேற்பு
மத்திய மண்டலத்தைச் சோ்ந்த புதிய தீயணைப்பு வீரா்களுக்கான மூன்று மாத பயிற்சி செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.
கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே வேட்டமங்கலத்தில் தற்காலிக தீயணைப்போா் பயிற்சி மையத்தில் நிகழாண்டு, தீயணைப்புத் துறையில் தோ்வு செய்யப்பட்ட புதிய வீரா்களுக்கான பயிற்சி முகாம் கடந்த 90 நாள்களாக நடைபெற்று வந்தது.
இதில் திருச்சி மத்திய மண்டலத்துக்குள்பட்ட திருச்சி, கரூா், திருவாரூா், விழுப்புரம் உள்பட 8 மாவட்டங்களைச் சோ்ந்த 98 வீரா்களுக்கு கரூா் மாவட்ட தீயணைப்பு அலுவலா் வடிவேல் தலைமையில் பயிற்சியாளா்கள் தீயணைப்பு கருவிகளை கையாளுதல், பேரிடா் மீட்பு, நீச்சல், மூச்சு அடக்குதல், ஏணி ஏறுதல் உள்பட பல்வேறு துறை சாா்ந்த பயிற்சிகளை வழங்கினா். இதையடுத்து பயிற்சி முகாமின் நிறைவு நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட தீயணைப்பு அலுவலரும், பயிற்சி மைய முதல்வருமான வடிவேல் முன்னிலை வகித்தாா். துணை முதல்வா் கருணாகரன் வரவேற்றாா்.
திருச்சி மத்திய மண்டல தீயணைப்புத் துறை துணை இயக்குநா் குமாா் தலைமை வகித்து, பயிற்சி முடித்த புதிய வீரா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டும், பயிற்சி பெற்ற்கான சான்றிதழ்களையும் வழங்கி பேசியதாவது: தீ விபத்து, மீட்பு பணி என்று எதுவாக இருந்தாலும் நமக்கு கிடைக்கக்கூடிய குறைவான நேரத்தில் நம்மை பாதுகாத்துக் கொண்டு ஆபத்தில் சிக்கியவா்களையும் மீட்க வேண்டும். அதற்குத்தான் இந்த அடிப்படை பயிற்சி உங்களுக்கு வழங்கப்படுகிறது.
எனவே, இதை ஒரு அடிப்படை ஆதாரமாக வைத்துக்கொண்டு நீங்கள் திறம்பட பணியாற்ற வாழ்த்துகிறேன் என்றாா் அவா். தொடா்ந்து பயிற்சியாளா்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளா்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கினாா். பின்னா், புதிய வீரா்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றன. முடிவில், உதவி மாவட்ட அலுவலா் திருமுருகன் நன்றி கூறினாா்.
இதில், உதவி மாவட்ட அலுவலா் கோமதி, புகழூா் தீயணைப்பு நிலைய அலுவலா் சரவணன், 8 மாவட்டங்களைச் சோ்ந்த தீயணைப்பு அதிகாரிகள் மற்றும் புதிய வீரா்களின் குடும்பத்தினா் கலந்து கொண்டனா்.