பும்ரா, கில், பன்ட்... இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டன் யார்?
இந்திய கிரிக்கெட் அணி 2024 டி20 உலகக் கோப்பை வென்ற அன்றே சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார் ரோஹித். அந்த சமயத்தில் இந்திய டி20 அணிக்கு துணைக் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாதான் இயல்பாகவே இந்திய டி20 அணிக்கு கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்த்த வேளையில், சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இத்தகைய சூழலில், மே 7-ம் தேதி ரோஹித் திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். இதனால், இந்தியா டெஸ்ட் அணிக்கு அடுத்த கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. அதில், ஏற்கெனவே ஆஸ்திரேலியாவுக்கெதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் துணைக்கேப்டனாகவும், ரோஹித் ஆடாதபோது கேப்டனாகவும் செயல்பட்ட பும்ராவை டெஸ்ட் அணிக்கு கேப்டனாக நியமிக்கலாம் என்று பேச்சுக்கள் அடிபடுகிறது.
யார் கேப்டன்?
இருப்பினும், பார்டர் கவாஸ்கர் தொடரில் கடைசி போட்டியில் காயம் ஏற்பட்டதால் சாம்பியன்ஸ் டிராபி தொடரையே தவறவிட்டார் பும்ரா. இப்படியிருக்க, ஜூனில் இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடர் 5 போட்டிகள் கொண்டது என்பதால் அணியில் முக்கிய வேகப்பந்துவீச்சாளராக பும்ராவை காயம் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது முக்கியம். எனவே, பும்ராவுக்கு கூடுதல் பணிச்சுமை கொடுக்காமல் வேறு யாரேனும் கேப்டன் பதவிக்கு நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
தவிர விரைவில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புதிய சீசன் தொடங்கும். இரண்டாண்டுகள் நீடிக்கும் இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் முழுமைக்கும், ஒரே கேப்டன் இருக்க அணி நிர்வாகம் விரும்பும். இதுவும் பும்ராவை கேப்டனாக நியமிக்க சிக்கலாக அமையலாம்.
அந்தப் பட்டியலில் சுப்மன் கில், ரிஷப் பன்ட், கே.எல். ராகுல் ஆகியோரின் பெயர்கள் இருக்கிறது. இவர்கள் மூவருமே கடைசியாக இந்தியா விளையாடிய பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடியிருந்தனர். அந்தத் தொடரில் இவர்கள் மூவரில் ஒருவர் கூட 300 ரன்கள் அடிக்கவில்லை. கே.எல். ராகுல் 276 ரன்களும் (2 அரைசதம்), ரிஷப் பண்ட் 255 ரன்களும் (1 அரைசதம்), சுப்மன் கில் 93 ரன்களும் அடித்திருந்தனர். இருப்பினும், நடப்பு ஐ.பி.எல் தொடரில் ரிஷப் பண்ட்டின் பேட்டிங் படுமோசமாக இருக்கிறது. கே.எல். ராகுலின் பேட்டிங் ஓரளவு பரவாயில்லை என்று இருக்கிறது.

அதேசமயம், சுப்மன் கில் குஜராத் அணியில் கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் நல்ல ஃபார்மில் இருக்கிறார். சாம்பியன்ஸ் டிராபியிலுமே கூட இந்திய அணியின் துணைக் கேப்டனாக செயல்பட்ட கில் பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதனால், இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்க அதிக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
பிசிசிஐ என்ன மாதிரியான முடிவை எடுக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.!