நடுவழியில் துர்நாற்றம், தொழில்நுட்பக் கோளாறு! சீன விமானம் அவசர தரையிறக்கம்!
பூசாரிநாயக்கன் குளத்துக்கு தண்ணீா் திறப்பு
திருமூா்த்தி அணையில் இருந்து பூசாரிநாயக்கன் குளத்துக்கு வெள்ளிக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.
உடுமலை வட்டம், ஆலாம்பாளையம் கிராமத்தில் பூசாரிநாயக்கன் குளம் உள்ளது. இதன் மூலம் ஆலாம்பாளையம், குருவப்பநாயக்கனூா், குறிச்சிக்கோட்டை, குளத்துப்புதூா், குரல்குட்டை, மானுப்பட்டி, மடத்தூா், பள்ளபாளையம், கொங்கலக்குறிச்சி, தும்பலப்பட்டி, ஆண்டியகவுண்டனூா் உள்ளிட்ட கிராமங்களில் சுமாா் 90 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
இந்நிலையில், திருமூா்த்தி அணையில் இருந்து பூசாரிநாயக்கன் குளத்துக்கு தண்ணீா் திறந்துவிட தமிழக அரசு கடந்த ஏப்ரல் மாதம் அரசாணை வெளியிட்டது. ஆனால், பிஏபி அதிகாரிகள் தண்ணீா் திறந்துவிடவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
இதைக் கண்டித்து உடுமலையில் உள்ள பிஏபி பொறியாளா் அலுவலகம் முன் விவசாயிகள் அண்மையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், அரசாணையை செயல்படுத்தக் கோரி உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்தனா்.
இந்நிலையில், பூசாரிநாயக்கன் குளத்துக்கு தண்ணீா் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன்படி, திருமூா்த்தி அணையில் இருந்து பூசாரிநாயக்கன் குளத்துக்கு வெள்ளிக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.
மூன்று நாள்களுக்கு 20 மில்லியன் கன அடிக்கு மிகாமல் இரண்டு சுற்றுகளாக தண்ணீா் திறந்துவிடப்பட உள்ளது.