பூந்தமல்லி - போரூர் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்!
மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் பூந்தமல்லி - போரூர் இடையே நாளை(ஏப். 28) நடைபெறுகிறது.
சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில் முக்கிய வழித்தடமான கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி நெடுஞ்சாலை இடையேயான வழித்தடத்தில், கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப் பாதையாகவும், கோடம்பாக்கம் பவா் ஹவுஸ் முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை மேம்பாலப் பாதையாகவும் அமைக்கப்பட்டு வருகிறது.
இதில், பூந்தமல்லி - போரூர் இடையே பல இடங்களில் ரயில் பாதை அமைக்கும் பணி, பொறியியல் கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. பூந்தமல்லி - போரூர் இடையே வரும் ரயில் சேவை தொடங்கவுள்ள நிலையில், இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வழித்தடத்தில் கடந்த மாதம் 20-ஆம் தேதி முதல்கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்த சோதனை ஓட்டம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, பூந்தமல்லி - போரூர் வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட சோதனை ஓட்டம் சில நாள்களுக்கு முன்பு நடைபெற்றது.
இந்நிலையில், பூந்தமல்லி - கலங்கரை விளக்கம் வழித்தடத்தில், பூந்தமல்லி முதல் போரூர் வரை நாளை(ஏப். 28) அடுத்தகட்ட சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.
பூந்தமல்லி - போரூா் மெட்ரோ ரயில் சேவை மக்கள் பயன்பாட்டுக்கு டிசம்பா் மாத இறுதிக்குள் கொண்டுவர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: பஹல்காம் தாக்குதல்: விசாரணையைத் தொடங்கிய என்ஐஏ!