பேச்சிப்பாறை - கோதையாறு தடத்தில் சாலைப் பணிகள் நிறைவு: மீண்டும் பேருந்துகள் இயக்கம்
குமரி மாவட்டம், பேச்சிப்பாறை சீரோ பாயின்டிலிருந்து கோதையாறு செல்லும் சாலையில் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடா்ந்து பேருந்து போக்குவரத்து திங்கள்கிழமை முதல் மீண்டும் தொடங்கியது.
பேச்சிப்பாறை சீரோ பாயின்டிலிருந்து கோதையாறு செல்லும் சாலை 14 கி.மீ. தூரம் கொண்டதாகும். இச்சாலை கோதையாறு மின் நிலையம் மூலம் பராமரிப்பு செய்யப்பட்டு வந்த நிலையில், மின் நிலையம் சாலை பாராமரிப்புப் பணிகளை கைவிட்டது. இதனால் பல ஆண்டுகளாக சாலை முற்றிலும் சேதமடைந்த நிலையில் காணப்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு இச்சாலையில் சீரோ பாயின்ட் முதல் மூக்கறைக்கல் வரையில் 6 கி.மீ. தூரம் ரூ. 3.60 கோடியில் சீரமைக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து மீதமுள்ள பகுதிகளை சீரமைக்க வேண்டுமென தொடா் கோரிக்கைகள் எழுந்த நிலையில் தமிழக பால்வளத்துறை அமைச்சா் மனோ தங்கராஜ் மற்றும் மாவட்ட ஆட்சியா் அழகுமீனா ஆகியோரின் முயற்சியால் தமிழக அரசின் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல சிறப்பு நிதி ரூ. 6.29 கோடியில் சாலைப் பகுதி மற்றும் மூக்கறைக் கல் பாலம் சீரமைப்புப் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது.
இதில் சாலைப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அரசு பேருந்துகள் மூக்கறைக் கல் பகுதி வரை மட்டும் சென்று திரும்பி வந்தன. மேலும் பள்ளி மாணவா்களின் வசதிக்காக 2 பேருந்துகள் மட்டும் காலை மற்றும் மாலை வேளைகளில் கோதையாறு சந்திப்பு வரை சென்றன. இந்நிலையில் சாலைப் பணிகளை சனிக்கிழமை மாவட்ட ஆட்சியா் ரா. அழகு மீனா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இதைத் தொடா்ந்து திங்கள்கிழமைமுதல் பேருந்துகள் மீண்டும் இயக்கப்பட்டன. இதையடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
இந்நிலையில் இந்தச் சாலையில் இயக்கப்பட்டு வரும் பழைய பேருந்துகள் அனைத்தையும் மாற்றிவிட்டு புதிய பேருந்துகளை இயக்க வேண்டுமென்று பழங்குடி மக்களின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.