பேரவையிலிருந்து அதிமுகவினர் வெளியே(ற்றம்)! செங்கோட்டையன் உள்ளே!!
தமிழக சட்டப்பேரவையில் இன்று அந்த தியாகி யார் என்ற வாசகம் பொறித்த பேட்ஜ் அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டு, பதாகைககளைக் காட்டியதால் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
ஆனால், அதிமுக எம்எல்ஏக்கள் அணிந்து வந்த பேட்ஜ் போன்று, செங்கோட்டையன் அணிந்து வராததால், அவரை அவைக் காவலர்கள் வெளியேற்றவில்லை.
அதிமுகவினர் வெளியேற்றப்பட்ட நிலையில், செங்கோட்டையன் அவைக்குள்ளேயே இருந்தார். அவருக்கு அவைத் தலைவர் அப்பாவு பேச அனுமதி வழங்கினார்.
கவன ஈர்ப்பு தீர்மானத்தில் செங்கோட்டையன் பங்கேற்று கேள்விகளை எழுப்பினார். கோபியில் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலை விரிவாக்கம் தொடர்பாக செங்கோட்டையன் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து பேசினார்.
தொடர்ந்து பேசிய செங்கோட்டையன், சாயப்பட்டறைகளிலிருந்து ஆறுகளில் கழிவுநீர் வெளியேற்றப்படுவது தொடர்பாக அவை உறுப்பினர்கள் பேசினார்கள். எனவே, சாயக் கழிவுநீர் ஆறுகளில் கலப்பதை முழுமையாகத் தடுக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, உரிய தொழில்நுட்பக் குழுக்களை சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி, அவர்கள் அளிக்கும் பரிந்துரையின்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கும் இது தொடர்பான தீவிர நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று பதிலளித்தார்.
கையில் பதாகைகளுடன் வெளியேற்றப்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் பேரவை வளாகத்தில் முழக்கங்கள் எழுப்பினர். பிறகு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார்.