போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலியில் டிரம்ப்புக்கு அவமரியாதையா?
போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு மூன்றாவது இருக்கை அளிக்கப்பட்டது நெட்டிசன்களிடையே பேசுபொருளாகி உள்ளது.
வாடிகன் நகரத்தின் தலைவரும் கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவுமான போப் பிரான்சிஸ், கடந்த ஏப்.21-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதனைத் தொடர்ந்து, அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர். இதனிடையே, இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு மூன்றாம் இருக்கையில் அமர்வு வழங்கப்பட்டது பேசுபொருளாகி உள்ளது.
போப் பிரான்சிஸுக்கும் டிரம்ப்புக்கும் இடையில் சிறு மனக்கசப்பு இருந்து வந்ததாக அவ்வப்போது சமூக ஊடகங்களில் செய்திகள் வந்து கொண்டிருந்தது. 2016 ஆம் ஆண்டில், அமெரிக்க அதிபராக முதன்முறையாக டிரம்ப் பதவியேற்றபோது, குடியேற்றத்தைத் தவிர்ப்பதற்காக அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில் ஒரு தடுப்புச் சுவர் கட்டப்படும் என்று டிரம்ப் கூறினார்.
டிரம்ப்பின் இந்தக் கூற்றைக் குறிப்பிட்டு, `டிரம்ப் கிறிஸ்தவர் அல்ல’ என்று போப் கூறினார். போப்பின் இந்தக் கருத்துகள் அவமானகரமானது என்று டிரம்ப் பதிலளித்தார்.
இவ்வாறான பிரச்னைகள்தான், டிரம்ப்புக்கு மூன்றாவது இருக்கை அளிக்கப்பட்டதற்கு காரணம் என்று சில நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். ஆனால், இதன் பின்னணி காரணம் பிரெஞ்சு மொழியின் நெறிமுறை அல்லது கலாசாரம் எனலாம்.

வாடிகனில் இருக்கைகளின் ஏற்பாடு, பிரெஞ்சு மொழியின் அகரவரிசைப்படி மேற்கொள்ளப்படும். அந்த வகையில், Etats Unis என்றழைக்கப்படும் அமெரிக்காவின் முதலெழுத்து ‘E' என்றுள்ளதால், அதற்கேற்ற அமர்வு வழங்கப்படும்.
அதுமட்டுமின்றி, அகரவரிசைப்படி பார்க்கையில் 130 நாடுகளுக்கு முன்னதாக உள்ள இருக்கையில்தான் டிரம்ப் அமர்ந்திருப்பார். முதல் இரண்டு இருக்கையில் ஆர்ஜென்டீனா அதிபரும், இத்தாலி பிரதமரும் அமர்வர்.
போப் பிரான்சிஸின் பிறந்த நாடான ஆர்ஜெண்டீனாவின் அதிபர்தான் முதல் இருக்கையில் அமர்ந்திருப்பார். 2023 ஆம் ஆண்டில் போப் பிரான்சிஸ் பதவியேற்றபோது, அவரை அர்ஜெண்டினா அதிபர் ஜேவியர் மிலே விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
1929 ஆம் ஆண்டில், வாடிகனை இறையாண்மை கொண்ட நாடாக இத்தாலி அங்கீகரித்தது. இதன் காரணமாக, இத்தாலிக்கு இரண்டாவது இருக்கை. இந்த இரண்டாவது இருக்கையில் இத்தாலி பிரதமரான ஜார்ஜியா மெலோனி அமர்வார்.
இதையும் படிக்க:பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிகளைத் தீவிரவாதிகள் எனக் குறிப்பிட்ட அமெரிக்க ஊடகம்