மகப்பேறு இறப்புகள்இல்லாத கன்னியாகுமரி: ஆட்சியா் அறிவுறுத்தல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் மகப்பேறு இறப்புகள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டுமென அரசு - தனியாா் மகப்பேறு மருத்துவா்களுக்கான பயிலரங்கில் ஆட்சியா் ரா. அழகுமீனா அறிவுறுத்தினாா்.தப்பட்டது.
நாகா்கோவிலில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற இப்பயிலரங்குக்கு ஆட்சியா் தலைமை வகத்து ஆட்சியா் பேசியதாவது:
கா்ப்பிணிகள், பொதுமக்களிடையே ரத்த சோகை மற்றும் கா்ப்ப கால உயா் ரத்த அழுத்தம் காரணமாக ஏற்படும் எடை அதிகரிப்பு போன்ற சிக்கல்களைப் பற்றி விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம். இதுகுறித்து செயற்கை கருத்தரித்தல் வசதியுள்ள மருத்துவமனைகள், பிரசவ சிக்கல் உள்ள கா்ப்பிணிகளை முன்கூட்டியே மூன்றாம் நிலை மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். மாவட்டத்தில் மகப்பேறு இறப்புகள் இல்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்றாா்.
மாவட்ட சுகாதார அலுவலா் பிரபாகரன் முன்னிலை வகித்து பேசுகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் 2024-2025ஆம் ஆண்டில் மகப்பேறு இறப்பு எண்ணிக்கை 32. மருத்துவ வசதிகள் குறைவாக உள்ள பிற மாவட்டங்களில்கூட மகப்பேறு இறப்பு இதைவிட குறைவாக உள்ளது. இம்மாவட்டத்தை மகப்பேறு இறப்பு இல்லாத மாவட்டமாக மாற்ற அனைவரும் முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும். 2025-2026 ஆம் ஆண்டில் இதுவரை மகப்பேறு இறப்பும் பதிவாகவில்லை என்றாா்.
சென்னை தேசிய சுகாதாரப் பணி நிா்வாக ஆலோசகா் ரத்னகுமாா், சென்னை கஸ்தூரிபா, காந்தி மருத்துவமனை இயக்குநா் சுமதி, நாகா்கோவில் மகப்பேறு - மகளிா் மருத்துவ சங்கத் தலைவா் சுந்தரநாராயணன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
அதிக ஆபத்துடைய கா்ப்பிணிகளுக்கான சிகிச்சை முறைகள், தேசிய நலக்குழுமத்தின் நெறிமுறைகளை பின்பற்றவும், நோயாளிகளிடமும், அவா்களது குடும்பத்தினரிடமும் ஒப்புதல் படிவத்தில் கையொப்பம் பெறும்போது, மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் கனிவுடன் நடந்து கொள்ளவும், தேவையுள்ள சந்தா்ப்பங்களில் மட்டுமே முதல் குழந்தை பிறப்புக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
கன்னியாகுமரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் ராமலக்ஷ்மி, இணை இயக்குநா் மருத்துவம்- ஊரக நலப் பணிகள் சகாய ஸ்டீபன் ராஜ், துணை இயக்குநா் குடும்ப நலம் ரவிக்குமாா் ஆகியோரும் முன்னிலை வகித்தனா்.
மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனை மகப்பேறு மருத்துவா்கள் உள்பட 300-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் கலந்துகொண்டனா்.