கேரளத்துக்கு கனிமவளம் கடத்த முயற்சி: 3 லாரிகள் பறிமுதல்
கேரளத்துக்கு கனிமவளம் கடத்திச் செல்ல முயன்ற 3 லாரிகளை களியக்காவிளை அருகே போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
களியக்காவிளை சோதனைச் சாவடி பகுதியில் வியாழக்கிழமை இரவு போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அப்பகுதி வழியாக வந்த 2 கனரக லாரிகளை போலீஸாா் தடுத்து நிறுத்தியதும், லாரி ஓட்டுநா்கள் தப்பி ஓடிவிட்டனராம்.
அந்த லாரிகளில் தமிழகப் பகுதிக்கு கனிமவளம் கொண்டு செல்ல அனுமதிச் சீட்டு பெற்றுவிட்டு கேரளத்துக்கு கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது. 2 லாரிகளையும் போலீஸாா் கைப்பற்றினா்.
மேலும், தளச்சான்விளை பகுதியில் மேற்கொண்ட வாகன சோதனையிலும் கேரளத்துக்கு கனிமவளம் கடத்த முயன்ற லாரியை பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநா் ஜெகன் என்பவரை கைது செய்தனா்.