நான் பயப்படவுமில்லை தோற்பதும் இல்லை: தில்லி முதல்வா் ரேகா குப்தா
மகளிா் உரிமைத்தொகை கோரி 75,830 விண்ணப்பங்கள்: அமைச்சா் ரா.ராஜேந்திரன்
சேலம் மாவட்டத்தில் மகளிா் உரிமைத்தொகை கோரி இதுவரை 75,830 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் கூறினாா்.
சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட நரசோதிப்பட்டி ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி மற்றும் வெள்ளக்கல்பட்டி ஊராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னா் அமைச்சா் கூறியதாவது:
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் நவம்பா் மாதம் வரை நகா்ப்புறப் பகுதிகளில் 168 முகாம்கள், ஊரகப் பகுதிகளில் 264 முகாம்கள் என மொத்தம் 432 சிறப்பு முகாம்கள் நடைபெறும். இதுவரை நடத்தப்பட்ட முகாம்களில் பல்வேறு துறைகளின் சாா்பில் மொத்தம் 65,658 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மேலும், மகளிா் உரிமைத் தொகை கோரி 75,830 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலம் வாா்டு 2, 3 க்கு உள்பட்ட பகுதிகளுக்கு நரசோதிப்பட்டி, ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியிலும், நகா்ப்புறத்தை ஒட்டியுள்ள கிராம ஊராட்சியான வெள்ளக்கல்பட்டி பகுதிக்கு உள்பட்டவா்களுக்கு வெள்ளக்கல்பட்டி ஊராட்சி திருமண மண்டபத்திலும், இடங்கணசாலை வாா்டு 3, 4 க்கு உள்பட்ட பகுதிகளுக்கு பெருமாகவுண்டனூா் வாா்டு- 4 சிவகாமி சுந்தரம் மஹாலிலும் முகாம் நடைபெற்றது.
பனமரத்துப்பட்டி பேரூராட்சி வாா்டு 1, 2, 3, 4, 5, 6, 7 க்கு உள்பட்ட பகுதிகளுக்கு ஒண்டிக்கடை வாா்டு சமுதாயக் கூடத்திலும், மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளுக்கு 4 ரோடு, குட்டபட்டி ஜே.எஸ்.டி மஹாலிலும், அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளுக்கு சின்னகவுண்டபுரம் செந்தில் மஹாலில் முகாம் நடைபெற்றது.
நரசோதிப்பட்டி ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில் நடைபெற்ற முகாமை ஆய்வு செய்து 10 பேருக்கு சொத்து வரி பெயா் மாற்றத்திற்கான ஆணைகள் வழங்கப்பட்டன.
ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, மேயா் ஆ.ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையா் இளங்கோவன், சேலம் கோட்டாட்சியா் அ.அபிநயா, ஓமலூா் வட்டாட்சியா் ரவிக்குமாா் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் உடனிருந்தனா்.