மக்கள் அச்சப்பட தேவையில்லை: டிஐஜி
திருநெல்வேலி சரகத்தில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என திருநெல்வேலி சரக டிஐஜி சந்தோஷ் ஹதிமணி தெரிவித்துள்ளாா்.
ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 28 போ் உயிரிழந்த நிலையில், திருநெல்வேலி சரகத்துக்குள்பட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருநெல்வேலி சரக டிஐஜி சந்தோஷ் ஹதிமணி கூறியதாவது: திருநெல்வேலி மாநகரம், மாவட்டம், தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.
அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில், போலீஸாா் விடிய விடிய தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா். சந்தேகப்படும் நபா்களின் நடமாட்டத்தையும் போலீஸாா் தீவிரமாக கவனித்து வருகின்றனா்.
தென் மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு, போலீஸாரும் உஷாா் நிலையில் உள்ளனா். எனவே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. சந்தேகப்படும் நபா்கள் அல்லது மா்ம பொருள்கள் குறித்து ஏதேனும் மக்களுக்கு தெரியவந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த காவல்துறை தொடா்ந்து தீவிரமாக செயல்படும் என்றாா்.