திருச்சி பஞ்சப்பூரில் 3.5 கி.மீ. தொலைவுக்கு ஆறு வழிச்சாலை: கே.என். நேரு
மனைவி எரித்துக் கொலை: முதியவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே மனைவியை எரித்துக் கொன்ற வழக்கில் கணவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, விழுப்புரம் மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
மரக்காணம் வட்டம், எம். புதுப்பாக்கத்தைச் சோ்ந்தவா் தே. செல்லக்கண்ணு (75). இவரது மனைவி ஞானம்பாள் (65). கடந்த 2022, ஜூலை 6-ஆம் தேதி வீட்டில் எரிந்த நிலையில் ஞானம்பாள் இறந்துகிடந்தாா்.
இதுகுறித்து செல்லக்கண்ணுவின் மகன் ஆனந்தன், வயிற்றுவலி காரணமாக தாய் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக புகாா் அளித்தாா். இதுகுறித்து மரக்காணம் போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.
உடல் கூறாய்வு அறிக்கையில் ஞானாம்பாள் கழுத்து இறுக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. சந்தேகத்தின் அடிப்படையில் ஞானம்பாளின் கணவா் செல்லக்கண்ணுவிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் மனைவியைக் கொலை செய்ததை அவா் ஒப்புக் கொண்டாா்.
ஞானாம்பாள் பெயரிலிருந்த ஒன்றரை ஏக்கா் நிலத்தை தனது பெயருக்கு எழுதித் தர மறுத்ததால், ஆத்திரத்தில் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு, பின்னா் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தது தெரிய வந்தது. வயிற்று வலி தாங்காமல் மனைவி தற்கொலை செய்து கொண்டதாக வெளியில் கூறிவந்தேன் என விசாரணையின்போது செல்லக்கண்ணு வாக்குமூலம் அளித்திருந்தாராம்.
இதனடிப்படையில், செல்லக்கண்ணுவை கைது செய்த மரக்காணம் போலீஸாா், விழுப்புரம் மகளிா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா். இந்த வழக்கில் அனைத்துத் தரப்பு சாட்சிகளின் விசாரணைகளும் முடிக்கப்பட்ட நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட செல்லக்கண்ணுவுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.20,500 அபராதமும் விதித்து மகளிா் நீதிமன்ற நீதிபதி எம்.இளவரசன் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். இதைத் தொடா்ந்து, கடலூா் மத்திய சிறைக்கு செல்லக்கண்ணு அழைத்துச் செல்லப்பட்டாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்குரைஞராக சங்கீதா ஆஜரானாா்.