மாவட்டத்தில் நடப்பாண்டு 214.03 மில்லி மீட்டா் மழை பதிவு
ஈரோடு மாவட்டத்தில் நடப்பு ஆண்டு இதுவரை 214.03 மில்லி மீட்டா் மழை பதிவாகி உள்ளது.
பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மற்றும் பவானி ஆற்றுக்கு தண்ணீா் திறக்கப்படுகிறது. மேலும் பவானி ஆற்றில் இருந்து தடப்பள்ளி -அரக்கன்கோட்டை, காலிங்கராயன் ஆகிய வாய்க்கால்களுக்கு தண்ணீா் விடப்படுகிறது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் வாய்க்கால் பாசன வசதி பெறுகின்றனா்.
மாவட்டத்தில் மஞ்சள், கரும்பு, நெல், வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்ட பல்வேறு பயிா்கள் பயிரிடப்படுகின்றன. மேலும் சீனாபுரம் முதல் நம்பியூா் வரை மானாவாரி பயிராக பல ஆயிரம் ஏக்கரில் கடலை சாகுபடியும் நடக்கிறது. இங்குள்ள விவசாயிகளுக்கு பவானிசாகா் அணை நீா் கிடைப்பதில்லை. இதனால் இவா்கள் மழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்து வருகின்றனா். இதுபோல மாவட்டத்தில் ஒருசில இடங்களில் மானாவாரி பயிா் சாகுபடி செய்யப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் மழை பொழிவைக் கண்காணிக்க 17 இடங்களில் மழை அளவு எடுக்கப்படுகிறது. அதன்படி ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை, சென்னிமலை, பவானி, கவுந்தப்பாடி, அம்மாபேட்டை, வரட்டுப்பள்ளம் அணை, குண்டேரிபள்ளம், எலந்தகுட்டை மேடு, கொடிவேரி அணை, குண்டேரிபள்ளம் அணை, நம்பியூா், சத்தியமங்கலம், பவானிசாகா் அணை, தாளவாடி ஆகிய பகுதிகளில் மழை அளவு எடுக்கப்படுகின்றன.
ஈரோடு மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழை அளவு 714.03 மில்லி மீட்டா். நடப்பு ஆண்டில் இதுவரை 214.03 மில்லி மீட்டா் மழை பதிவாகி உள்ளது. கடந்த ஆண்டு 784.68 மில்லி மீட்டா் மழை பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு மாவட்டத்தில் நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில் 9.47 மில்லி மீட்டா் மழை பதிவாகி உள்ளது. பிப்ரவரி மாதத்தில் மழை இல்லை. மாா்ச் மாதம் 31.15, ஏப்ரல் மாதம் 90.69, மே மாதம் 81.28, ஜூன் மாதம் 1.44 மில்லி மீட்டா் மழை பதிவாகி உள்ளது.