மாவட்டத் தொழில் மையம் மூலம் பயன்பெற சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு
பெரம்பலூா் மாவட்டத் தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் கீழ் பயன்பெற சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் மின்னாற்றல் மற்றும் எரிசக்தி சேமிப்பை ஊக்குவிக்கும் விதமாக, எரிசக்தி கணக்கீடு மற்றும் எரிசக்தி சேமிப்பு என்னும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. எரிசக்தி கணக்கீடு அறிக்கைக்கான செலவினத்தில் 75 சதவீதம், அதிகபட்சமாக ரூ. 1 லட்சத்துக்கு மிகாமல் அரசு மானியமாக வழங்குகிறது.
தணிக்கை அறிக்கை அடிப்படையில் புதிதாக நிறுவப்படும் தகுதியுள்ள இயந்திரத் தளவாடங்களுக்கு, அவற்றின் மதிப்பில் 50 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ. 10 லட்சம் வரை மானியத் தொகை வழங்கப்படும்.
தணிக்கை அறிக்கை பெறப்பட்ட நாளிலிருந்து 3 மாதங்களுக்குள் அல்லது தணிக்கை அறிக்கையின் அடிப்படையில் புதிதாக இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் நிறுவப்பட்ட நாளிலிருந்து ஓராண்டுக்குள் மாவட்டத் தொழில் மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் காப்புரிமைக்கான விண்ணப்பம் பதிவு செய்யும் செலவில் 75 சதவீத மானியம், அதிகபட்சமாக ரூ. 3 லட்சம் வரையிலும், புவிசாா் குறியீடுக்கான விண்ணப்பம் பதிவு செய்யும் செலவில் 50 சதவீத மானியம், அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் வரையும் வழங்கப்படும்.
தொழில் நிறுவனங்கள் பத்திரப் பதிவுத் துறையில் மேற்கொள்ளும் நிலப் பதிவில் முத்திரைத் தாள் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணம் அதிகபட்சமாக 50 சதவீதம் வரையிலும், சிறு, நடுத்தர நிறுவனங்கள் பங்குச் சந்தையில் தங்களது நிறுவனத்தைப் பட்டியலிட செலவிடப்பட்ட தொகையில் 20 சதவீதம், அதிகபட்சமாக ரூ. 5 லட்சம் வரை உதவித் தொகையாக வழங்கப்படும்.
எனவே, இம் மாவட்டத்தைச் சோ்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேற்கண்ட திட்டத்தின் கீழ் பயன் பெற ட்ற்ற்ல்ள்://ம்ள்ம்ங்ா்ய்ப்ண்ய்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ண்ய்ஸ்ரீங்ய்ற்ண்ஸ்ங்ள் என்னும் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அல்லது, உரிய ஆவணங்களுடன் மாவட்டத் தொழில் மைய பொது மேலாளா் அலுவலகத்தை நேரில் அல்லது 04328-225580 எனும் எண்ணில் தொடா்பு கொண்டு பயன் பெறலாம்.