``முதல்வர் வேட்பாளராக விஜய்யை அறிவித்தது..'' - ஆர்.பி.உதயகுமார் சொல்லும் கணக்கு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெ.கன்னியம்பட்டியில் அ.தி.மு.க நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசும்போது, "முதல்வர் வேட்பாளராக விஜய்யை அறிவித்தது குறித்து விஜய்யிடம்தான் கேட்க வேண்டும், எங்களிடம் கேட்டால் எப்படி பதில் சொல்வது?

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பயணம் தொடஙகும்போது எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தி வந்திருக்கிறது.
இதற்கு முன்பே கோரிக்கையாக வைத்தோம், அவர் வீட்டிற்கு பல முறை வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது, பலமுறை உயிருக்கு அச்சுறுத்தல் வந்தது. அவரை பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமை, இந்த அறிவிப்பை 8 கோடி தமிழ் மக்கள் சார்பில் வரவேற்கிறோம்.
எடப்பாடி பழனிசாமி தெளிவான தேர்தல் வியூகம் அமைத்துள்ளார். திமுக ஆட்சி வேண்டாம் என சொல்பவர்கள் 80 சதவிகிதம், தொடர வேண்டும் என சொல்பவர்கள் 20 சதவிகிதம் பேர். ஆனால் 80 சதவிகிதம் பேர் தனித்தனியாக குரல் எழுப்புவதால் ஸ்டாலின் அதில் குளிர் காய்கிறார்.
இந்த 80 சதவிகிதம் பேர் ஒன்றாக இணைந்தால் மக்கள் எண்ணங்களும் நிறைவேறும், எதிர்ப்பு குரல் எழுப்பும் அனைத்து கட்சிகளின் எண்ணங்களும் நிறைவேறும். அதனால் தான் வாக்குகள் சிதறக் கூடாது என்பதற்காக தெளிவான தேர்தல் வியூகம் அமைத்துள்ளார். விளம்பரத்தை நம்பியிருக்கும் திமுகவினர், வாக்குகள் சிதறுவதால் இப்போது 30 சதவிகிதம் வாக்காளர்களை திமுகவில் சேர்க்க வேண்டும் என்கிறார்கள்.

மக்கள் நம்பிக்கை இழந்த காரணத்தினால் அவரே தெருவில் இறங்கி ஒவ்வொரு மாவட்டச்செயலாளரிடமும் நீங்கள் எத்தனை பேரை சேர்த்தீர்கள் என கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மதுரையில் ஒரு மாதம் நிகழ்ச்சி நடத்தப்போவதாக செய்தி வருகிறது. உங்கள் மாவட்டத்தில், உங்கள் வீட்டில், உங்கள் ஸ்டாலின் என சொல்கிறார்கள் சொல்வதோடு சரி அவ்வளவுதான், எடப்பாடி பழனிசாமியின் எழுச்சி பயணம் மாபெரும் வரலாற்றை உருவாக்கும்" என்றர்.