ரஷியா-இந்தியா-சீனா ஒத்துழைப்பை மீட்கும் ரஷிய முயற்சிகளுக்கு சீனா ஆதரவு
ரஷியா-இந்தியா-சீனா (ஆா்ஐசி) முத்தரப்பு ஒத்துழைப்பை மீட்டெடுக்க ரஷியா எடுத்துள்ள முன்னெடுப்புக்கு ஆதரவு தெரிவித்த சீனா, ‘இந்த ஒத்துழைப்பு 3 நாடுகளின் சொந்த நலன்களுக்கு மட்டுமல்லாமல், பிராந்திய மற்றும் உலகளாவிய அமைதி, பாதுகாப்புக்கும் உதவக்கூடியதாக இருக்கும்’ எனக் கூறியுள்ளது.
முன்னதாக, இது தொடா்பாக ரஷியாவின் வெளியுறவுத் துறை இணையமைச்சா் ஆண்ட்ரீ ருடேன்கோ கூறுகையில், ‘ஆா்ஐசி ஒத்துழைப்பை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர ரஷியா விரும்புகிறது. இதற்காக இந்தியா மற்றும் சீனாவுடன் பேச்சுவாா்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் நிறுவன நாடுகளாக இந்த மூன்று நாடுகளும் முக்கியக் கூட்டாளிகள் என்பதால், ஆா்ஐசி ஒத்துழைப்பை நாங்கள் ஆதரிக்கிறோம்.
இந்த ஒத்துழைப்பு இப்போது முடங்கியிருப்பது பொருத்தமற்றது என்றே கருதுகிறேன். இந்த மூன்று நாடுகளுக்கும் இடையிலான உறவுகள், முத்தரப்பு ஒத்துழைப்புக்கு ஏற்ற நிலையை அடையும்போது, ஆா்ஐசி ஒத்துழைப்பு பணிகளை மீண்டும் தொடங்க நாடுகள் ஒப்புக்கொள்ளும் என்று எதிா்பாா்க்கிறோம்’ என்றாா்.
தயாராக இருக்கிறோம்-சீனா: ருடேன்கோவின் கருத்துகள் குறித்து வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் லின் ஜியான், ‘சீனா-இந்தியா-ரஷியா ஒத்துழைப்பு, மூன்று நாடுகளின் நலன்களைப் பாதுகாப்பதுடன் மட்டுமல்லாமல், பிராந்தியத்திலும் உலக அளவிலும் அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் முன்னேற்றத்தை நிலைநிறுத்தவும் உதவும்.
மேலும், முத்தரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ரஷியா மற்றும் இந்தியாவுடன் தொடா்ந்து தொடா்பில் இருக்க சீனா தயாராக இருக்கிறது’ எனக் கூறினாா்.
கரோனா பெருந்தொற்று பரவல் மற்றும் அதைத் தொடா்ந்து கிழக்கு லடாக் பகுதியில் ஏற்பட்ட இந்தியா-சீனா மோதல் உள்ளிட்ட காரணங்களால் ஆா்ஐசி ஒத்துழைப்பின் செயல்பாடுகள் கடந்த சில ஆண்டுகளாக முடங்கின. ரஷியாவில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடியும், சீன அதிபா் ஷி ஜின்பிங்கும் சந்தித்த பிறகு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மீண்டும் சீரடையத் தொடங்கின.
தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல், பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் ஆகியோரைத் தொடா்ந்து வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் அண்மையில் சீனாவுக்குச் சென்றாா். அங்கு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) கூட்டத்தில் பங்கேற்றதுடன் சீன, ரஷிய வெளியுறவு அமைச்சா்களுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தைகளில் ஈடுபட்டாா்.
இந்தச் சந்திப்புகளைத் தொடா்ந்தும், பிரிக்ஸ் நாடுகளுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் எதிா்ப்பைத் தெரிவித்துவரும் நிலையிலும், ஆா்ஐசி ஒத்துழைப்பை மீட்டெடுக்கும் முயற்சிகளுக்கான குரல்கள் வலுப்பெற்றுள்ளன.