ராஜஸ்தான்: 3 நாள்களில் கள்ளச்சாராயம் குடித்த 8 பேர் பலி!
ராஜஸ்தானில் 3 நாள்களில் கள்ளச்சாரயம் குடித்த 8 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்வார் மாவட்டத்திலுள்ள பையிண்ட்பூர் மற்றும் கிஷான்பூர் ஆகிய கிராமங்களில் பல காலமாக கள்ளச்சாராயம் விற்கப்பட்டு வருவதாகவும், காவல் துறை அதிகாரிகளிடன் புகாரளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஏப்.26 ஆம் தேதியன்று கள்ளச்சாராயம் குடித்த பையிண்ட்பூரைச் சேர்ந்த சுரேஷ் வால்மிகி (வயது 45) என்பவர் பலியானார். அதைத் தொடர்ந்து, கடந்த ஏப்.27 அன்று கிஷன்பூரைச் சேர்ந்த ராம் கிஷோர் (47) மற்றும் ராம் குமார் (35) கள்ளச்சாராயம் குடித்ததினால் ஏற்பட்ட பாதிப்பினால் பலியானார்.
இதனைத் தொடர்ந்து, ஏப்.28 ஆம் தேதியன்று மட்டும் ஒரே நாளில் கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் பலியாகியுள்ளனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் அந்த இரு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.
மேலும், உயிரிழப்புகள் ஏற்படத் துவங்கி 3 நாள்கள் கழித்தே மாவட்ட நிர்வாகம் அங்கு வந்ததாகவும், அவர்களது அலட்சியப் போக்கே இந்தச் சம்பவத்துக்கு முக்கிய காரணம் என அக்கிராமவாசிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தினால் அப்பகுதி முழுவதும் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ள நிலையில் இது குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க:அமேதியில் ராகுல்: ஆயுத தொழிற்சாலையை ஆய்வு செய்தார்!