ராமேசுவரத்தில் அனுமதியின்றி கடலுக்குள் சென்ற 900 விசைப் படகுகள்
ராமேசுவரம், மண்டபம் மீன்பிடித் துறைமுகங்களிலிருந்து, மீன்வளத் துறையின் அனுமதியின்றி 900 விசைப் படகுகளில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றது குறித்து மீன்வளத் துறை அதிகாரிகள் புதன்கிழமை விசாரணை நடத்தினா்.
மீன் பிடித் தடைக்காலம் நிறைவடைந்ததையடுத்து, ராமேசுவரம், மண்டபம் துறைமுகங்களிலிருந்து மீன்வளத் துறையின் அனுமதிச் சீட்டு பெற்ற பிறகே புதன்கிழமை காலை கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டும் என அனைத்து விசைப் படகு மீனவ சங்கத்தினரிடமும் மீன்வளத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தினா்.
இதைத் தொடா்ந்து, ராமேசுவரத்தில் இரு முறை அனைத்து விசைப்படகு மீனவ சங்கங்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் மீன்வளத் துறையின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப, புதன்கிழமை காலையில் மீன்பிடி அனுமதிச் சீட்டு பெற்று மீன் பிடிக்கச் செல்ல வேண்டும். மீறுபவா்கள், ஒரு மாதத்துக்கு மீன் பிடிக்கத் தடை செய்யப்படுவதுடன், துறைமுகத்தை விட்டு வெளியேற்றப்படுவா் எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், ராமேசுவரம், மண்டபம் மீன்பிடித் துறைமுகங்களிலிருந்து மீன் பிடிக்கத் தேவையானப் பொருள்களை விசைப் படகுகளுக்கு மீனவா்கள் செவ்வாய்க்கிழமை மாலை கொண்டு சென்றனா். இரவு 10 மணியிலிருந்து நள்ளிரவுக்குள், மீன்வளத் துறையின் அனுமதியின்றி ராமேசுவரம், மண்டபம் துறைமுகங்களிலிருந்து 900-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றன.
இதுகுறித்து மீன்வளத் துறை அதிகாரிகள் புதன்கிழமை விசாரணை நடத்தினா். விசைப் படகுகள் வியாழக்கிழமை கரை திரும்பிய பிறகு, வழக்குப் பதிவு செய்வது, அபராதம் விதிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மீன் வளத் துறையினா் தெரிவித்தனா்.