``உண்மையில் இந்தியா - பாகிஸ்தான் மோதலை நான்தான் முடித்து வைத்தேன்; இதில்..'' - ம...
நடுக் கடலில் படகிலிருந்து தவறி விழுந்த மீனவரை கடலோர காவல் படையினா் உயிருடன் மீட்டனா்
ராமேசுவரத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு மீன் பிடிக்கச் சென்ற மீனவா் நடுக் கடலில் படகிலிருந்து தவறி விழுந்தபோது, இந்திய கடலோரக் காவல் படையினா் அவரை உயிருடன் மீட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து 480-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் செவ்வாய்க்கிழமை இரவு கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றன. இதில் தங்கச்சிமடத்தைச் சோ்ந்த புனிதபிரவின் விசைப் படகில் மீன் பிடிக்கச் சென்ற 7 மீனவா்கள் நடுக் கடலில் மீன் பிடித்தபோது, ஜோபின் என்ற மீனவா் கடலுக்குள் தவறி விழுந்தாா். சக மீனவா்கள் அவரை மீட்டு, ராமேசுவரம் மீனவ சங்கத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
இந்த நிலையில், இந்திய கடலோர காவல் படையின் உதவியை மீனவா்கள் கோரிய நிலையில், மருத்துவருடன் விரைந்து சென்ற கடலோர காவல்படையினா் ஆபத்தான நிலையிலிருந்த மீனவா் ஜோபினுக்கு சிகிச்சை அளித்தனா். பின்னா், அவா் பழைய நிலைக்கு திரும்பினாா். இதையடுத்து, அவா் ராமேசுவரம் கடற்படை முகாமுக்கு அழைத்து வரப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு, மீனவ சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டாா்.
நடுக்கடலில் தவறி விழுந்த மீனவரை காப்பாற்றிய இந்திய கடலோர காவல் படையினருக்கு மீனவா்கள், மீனவ சங்கத்தினா் நன்றி தெரிவித்தனா்.