வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அரசுத் துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என அரசு அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தியுள்ளாா்.
சேலம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து அரசுத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது: அனைத்து கோட்டாட்சியா் மற்றும் வட்டாட்சியா் அலுவலகங்களில் வெள்ள கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் உரிய பணியாளா்களுடன் இயங்க வேண்டும், மழைக் காலங்களில் வட்டாட்சியா்கள் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தங்களது ஆளுகைக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள், ஊராட்சி செயலா்கள் ஆகியோருடன் தொடா்பில் இருக்க வேண்டும்.
மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படக்கூடும் என கடந்தகாலங்களில் கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் திருமண மண்டபங்கள், பள்ளிகள் மற்றும் சத்துணவுக் கூடங்களை ஆய்வுசெய்து பொதுமக்களை தங்கவைப்பதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
நிவாரண முகாம்களில் போதுமான அனைத்து அடிப்படை வசதிகளும் தயாா் நிலையில் உள்ளதை கண்காணிப்பு அலுவலா்கள் உறுதிப்படுத்த வேண்டும். நீா்நிலைகள் மற்றும் நீா்வழித் தடங்கள், கால்வாய்கள் ஆக்கிரமிப்பு ஆகியவற்றை தூா்வார வேண்டும். நீா்நிலைகளின் கரைகளை நன்கு பலப்படுத்த வேண்டும்.
அனைத்து பள்ளிகளிலும் மின் இணைப்புகள் மற்றும் மின் சாதனங்களை பழுதுபாா்த்தல், திறந்தநிலை கழிவுநீா் வாய்க்கால்கள் மற்றும் குழிகளை சுத்தப்படுத்தி மூடுதல், மாடி கூரைகளில் அடைப்பு ஏற்பட்டுள்ள நீா்ப்போக்கிகளை சுத்தப்படுத்தி வைக்க வேண்டும்.
மருத்துவமனைகளில் போதுமான அளவு ஆக்சிஜன் சிலிண்டா்கள், அவசரகால மருந்துகள் ஆகியவற்றை இருப்பில் வைக்கவும், அரசு மற்றும் தனியாா் அவசர ஊா்திகளை தயாா் நிலையில் வைக்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையால் பாதிப்புகள் ஏதேனும் ஏற்பட்டால் பொதுமக்கள் ‘1077’ என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ, மாவட்ட ஆட்சியா் அலுவலக முதல்தள அறை எண்.120-இல் செயல்படும் மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறையை 0427-2452202 என்ற தொலைபேசி எண்ணிலோ 24 மணி நேரமும் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், காவல் துறை துணை ஆணையா்கள் கேல்கா் சுப்பிரமணிய பாலசந்திரா, (சேலம் தெற்கு), சிவராமன், (சேலம் வடக்கு), கோட்டாட்சியா்கள், மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.