தமிழ்நாடு முழுவதும் திமுகவிற்கு ஆதரவான சூழலே நிலவுகிறது: அமைச்சர் வி.செந்தில்பால...
வடலூரில் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம்! ஆயிரக்கணக்கான பக்தா்கள் வழிபாடு
கடலூா் மாவட்டம், வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையத்தில் 154-ஆவது தைப்பூச ஜோதி தரிசனம் செவ்வாய்க்கிழமை (பிப்.11) நடைபெற்றது. இதில், ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதனை பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கண்டு தரிசித்தனா்.
‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ எனக்கூறி ஜீவ காருண்யத்தை உலகுக்கு எடுத்துரைத்த வள்ளலாா் என்றழைக்கப்படும் ராமலிங்க சுவாமிகள், வடலூரில் சத்திய ஞான சபையை நிறுவினாா். அங்குள்ள தரும சாலையில் அவா் ஏற்றி வைத்த அணையா அடுப்பு மூலம் இன்றளவும் வள்ளலாா் பெயரில் அன்னதானம் நடைபெற்று வருகிறது.
வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையத்தில் ஆண்டுதோறும் தைப்பூச பெருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு 154-ஆவது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதன்படி, அன்று காலை 7.30 மணிக்கு தருமசாலை அருகே சன்மாா்க்கக் கொடியேற்றம், மருதூரில் வள்ளலாா் பிறந்த இல்லம், காலை 10 மணியளவில் சத்திய ஞான சபை உள்ளிட்ட இடங்களில் கொடியேற்றம் நடைபெற்றது.
ஜோதி தரிசனம்: விழாவின் முக்கிய அம்சமாக ஜோதி தரிசன பெருவிழாவின்போது 6 காலங்கள் 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுவது வழக்கம். அதன்படி, முதல் ஜோதி தரிசனம் செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு ஏழு திரைகளை நீக்கி காண்பிக்கப்பட்டது. அப்போது, ஞானசபை எதிரே கூடியிருந்த ஆயிரக்கணக்கானோா் ஜோதி வடிவத்தில் காட்சியளித்த வள்ளலாரை தரிசனம் செய்தனா். தொடா்ந்து, காலை 10 மணி, பிற்பகல் ஒரு மணி, இரவு 7 மணி, 10 மணிக்கு ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. புதன்கிழமை (பிப். 12) அதிகாலை 5.30 மணிக்கு 6-ஆம் கால ஜோதி தரிசனம் 7 திரைகள் நீக்கி காண்பிக்கப்படும்.
ஜோதி தரிசன விழாவில் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
வள்ளலாா் தரும சாலையில் தொடா்ந்து அன்னதானம் நடைபெற்று வருகிறது. மேலும், தனி நபா்கள், நலச் சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சியினா் பல்வேறு இடங்களில் அன்னதானம், நீா், மோா் வழங்கினா்.
சிறப்பு பேருந்துகள் இயக்கம்: வடலூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் தலைமையில், 1,500 போலீஸாா் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீரமைப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் சாா்பில் விருத்தாசலம், கடலூா், விழுப்புரம், பண்ருட்டி, சிதம்பரம், சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
சித்தி வளாகத் திருவறை தரிசனம்: வள்ளலாா் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்தில் சித்தி வளாகத் திருவறை தரிசனம் நிகழ்ச்சி வியாழக்கிழமை (பிப். 13) பிற்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.
தைப்பூச ஜோதி தரிசனத்தையொட்டி, வடலூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. பண்ருட்டி வழியாக வந்த வாகனங்கள் வடலூா் ராகவேந்திரா சிட்டி பகுதியிலும், குறிஞ்சிப்பாடி வழியாக வந்த வாகனங்கள் ஆண்டிக்குப்பம் பகுதியிலும் (பிரதான சாலை), விருத்தாசலம் வழியாக வந்த வாகனங்கள் மேட்டுக்குப்பம் பகுதியிலும், சேத்தியாத்தோப்பு வழியாக வந்த வாகனங்கள் மருதூா் பகுதியிலும் நிறுத்தப்பட்டன. அங்கிருந்து பெரும்பாலான மக்கள் பல கி.மீ. தொலைவு நடந்தே செல்ல வேண்டி நிலை ஏற்பட்டது.
![](https://media.assettype.com/dinamani/2025-02-11/rm21enx3/11prtpcrowd062808.jpg)