விதிமீறிய வாகன ஓட்டிகளிடம் ரூ.15.70 லட்சம் அபராதம் வசூலிப்பு
``வயசாகிடுச்சுனு நானேதான் சீட் வேண்டாம்னேன்; வேறெந்த பிரச்னையும் இல்லை" - திமுக எம்.பி.சண்முகம்
திமுக-வின் தொழிலாளர் அணியான தொ.மு.ச-வில் ஆங்காங்கே நடக்கும் உள் பஞ்சாயத்துகள் நீதிமன்றம் வரை சென்றிருப்பது திமுக தலைமையை ரொம்பவே அப்செட் ஆக்கியிருக்கிறதாம்.
தற்போது நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக இருக்கும் தொ.மு.ச பொதுச்செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிகிறது. அவருக்கு மீண்டும் வாய்ப்பு தராதது ஒருபக்கம் தொழிற் சங்கத்தினரிடையே அதிருப்தியை உண்டாக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

ராஜ்ய சபாவோ லோக் சபாவோ, தொ.மு.ச கோட்டாவுக்கு ஒரு சீட் என்பது கட்சியில் காலங்காலமாக இருந்து வரும் வழக்கம்தான். முன்பு தொ.மு.ச-வின் குப்புசாமியுமே எம்.பி.யாக இருந்தவர்தான். அந்த அடிப்படையில்தான் தற்போது சண்முகத்துக்கும் மேலவை சீட் தரப்பட்டது. ஆனால் தற்போது சண்முகம் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் தொ.மு.ச-வைச் சேர்ந்த வேறு எவருக்கும் அந்த இடம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் தான் கட்சிக்காரர்களே சிலர், கட்சிக்கும் தொ.மு.ச-வுக்கு இடையே கருத்து வேறுபாடு உருவாகி இருக்கிறது என்கிறார்கள்.
சமீபத்தில் நடந்த இரு சம்பவங்கள் இவர்களின் பேச்சுக்கு வலு சேர்ப்பது போல் இருக்கின்றன. முதலாவது தொ.மு.ச-வின் சென்னை மாநகர போக்குவரத்து கழகத் தேர்தல் தொடர்பாக தொ.மு.ச உறுப்பினர்கள் சிலரே நீதிமன்றம் சென்றது. தேர்தலே நடத்தாமல் கட்சித் தலைமை நிர்வகித்த போக்குவரத்து கழக நிர்வாகிகள் நியமனத்தை எதிர்த்தே இவர்கள் கோர்ட்டுக்குச் சென்றனர். நீதிமன்றமும் அந்த நிர்வாகிகளின் பதவியேற்க தடைவிதித்துள்ளது.

இரண்டாவது தமிழ்நாடு மின்வாரிய தொ.மு.ச தேர்தல் விவகாரம். இதிலுமே நீதிமன்றம் தலையிட்டிருக்கிறது.
தொ.மு.ச-வுக்கும் கட்சிக்குமிடையில் என்னதான் நடக்கிறது? சென்னை மாநகர போக்குவரத்து கழக தொமுசவினர் சிலரிடம் பேசினோம்.
‘’பதவிக்காலம் முடிவடைஞ்ச பிறகும் தேர்தலை நடத்தாம இருக்கறது, திரும்பத் திரும்ப சிலரே பதவிகளை அனுபவிக்கிறதுனு சில பிரச்னைகள்தான் காரணம். பதவிகளில் இருக்கிறவங்களும் தொழிற்சங்க உறுப்பினர்களின் பிரச்னைகளுக்கு உதவுறாங்களான்னா அதுவுமில்லை. இந்தப் பதவிகளை விடாப்பிடியா வச்சுகிட்டு சிலர் மட்டுமே வளமா இருக்கிறாங்க. இதைத்தான் கேள்வி கேட்கிறோம்.

ஆனா அவங்க கட்சித் தலைமைகிட்டயும் தவறான தகவல்களைச் சொல்லி தேர்தலே நடக்கவிடாமச் செய்யப் பார்த்தாங்க. அதோட விளைவுதான் கோர்ட்டுக்கு விவகாரம் வந்திருக்கு. கொல்லைப்புறம் வழியா நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் நியமனத்தை பொதுச் செயலாளர் துரைமுருகன் ஏத்துக்கலைனு சொன்னாங்க. . ஆனாலும் அந்தப்பட்டியல் வெளியாச்சுன்னும் பேப்பர்லயே செய்தி வந்திடுச்சு’’ என்கிறார்கள் இவர்கள்.
மின் வாரிய விவகாரம் குறித்துப் பேசிய மின்வாரிய தொ.மு.ச-வினரோ, `தஞ்சாவூர் சரகத்தைச் சேர்ந்த ஒருத்தர் வழக்கு தொடர்ந்திருக்கார். அந்த வழக்கை விசாரித்த நீதிம்னறம் முறைப்படி தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி என்.கிருபாகரனை நியமித்திருக்கிறது.
தொழிற்சங்கத்துல இப்படி ஒவ்வொருத்தரா வழக்கு போட்டு அது மீடியாவுக்கு வர்றது நல்லாவா இருக்கு. கட்சித் தலைமை தொழிற்சங்கத் தலைமைக்கு நல்லபடியா அறிவுரை கூறி தேர்தல் முறைப்படி நடக்க நடவடிக்கை எடுத்திருந்தா இந்த நிலை வந்திருக்குமா? எல்லாத்தையும் வேடிக்கை மட்டுமே பாத்திட்டிருந்தா இப்படிதான் நடக்கும். கோர்ட்டு வரை விவகாரம் வந்த பிறகு அப்செட் ஆகி என்ன பிரயோஜனம்’ என்கின்றனர்.

இந்தப் பிரச்னைகள் குறித்து தொமுச பொதுச்செயலாளர்ர் சண்முகத்திடமே பேசினோம்.
‘’தொ.மு.ச-வுக்கு கட்சித் தலைமைகிட்ட பிரச்னைங்கிறதெல்லாம் சும்மா கிளப்பி விடப்படுகிற செய்திகள். அதுல எந்த உண்மையுமில்லை. ஜனநாயகமான இயக்கத்துல இந்த மாதிரியான பிரச்னைகள் சாதாரணமா நடக்கிறதுதான். இதைப் பூதாகரமா ஆக்குறது எதிர்க்கட்சிகளின் வேலை. அங்கங்க சின்னச் சின்னப் பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும். அதெல்லாம் சரியாகிடும்’’ என்றவரிடம்,
தொமுச கோட்டாபடி இப்போது எம்.பி.க்கள் என யாருமில்லையே என்ற கேள்வியையும் வைத்தோம்.
‘வயசாயிடுச்சுன்னு நாந்தான் எனக்கு திரும்பவும் சீட் வேண்டாம்னு சொன்னேன். இப்ப இல்லைன்னா இந்த நிலை அப்படியேவா தொடரும்? அடுத்த முறை தரப்போறாங்க. யாருக்கு எப்ப என்ன பண்ணணும்னு கட்சி தலைமைக்குத் தெரியும்’ என முடித்துக் கொண்டார்.