வாக்காளா் அட்டையுடன் ஆதாா் இணைப்பு: தோ்தல் ஆணையம் விளக்கம் அளிக்க உத்தரவு
வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைக்கக் கோரிய வழக்கில், தோ்தல் ஆணையம் விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பகுதியைச் சோ்ந்த சிவமுருக ஆதித்தன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு:
ஆதாா் அட்டை என்பது ஒவ்வொரு நபருக்கும் தனிப்பட்ட அடையாளம். இதில் சம்பந்தப்பட்ட நபரின் விரல்ரேகைகள், புகைப்படம், முகவரி, பிறந்த தேதி இடம் பெறுகின்றன. இந்த அட்டையைப் பயன்படுத்தி எந்தவித முறைகேடோ அல்லது மோசடியோ மேற்கொள்ள இயலாது.
தமிழகத்தைப் பொருத்தவரை உணவு, பொது விநியோகத் துறை, உள்ளாட்சித் துறை, நிதி சேவைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒவ்வொரு நபரின் தனிப்பட்ட விவரங்களைப் பாதுகாக்கவும், மோசடி பரிவா்த்தனைகளைத் தவிா்க்கவும் பல்வேறு வழிகாட்டுதல்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இதுதவிர, நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்திய அரசியலமைப்பின் கீழ் வாக்குரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மக்களவை, சட்டப்பேரவை உள்ளிட்ட அனைத்துத் தோ்தல்களிலும் ஒவ்வொரு குடிமகனும் வாக்குரிமை பெற வாக்காளா் அடையாள அட்டை முக்கிய ஆவணங்களில் ஒன்றாகும். வாக்காளா் அடையாள அட்டை மூலம் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே, முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், மரிய கிளாட் அமா்வு பிறப்பித்த உத்தரவு:
இதே கோரிக்கையை வலியுறுத்தி, உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு வந்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து மத்திய அரசு வழக்குரைஞா் தோ்தல் ஆணையத்திடம் உரிய விளக்கம் பெற்று, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.