வீட்டுக்கு வரி நிா்ணயிக்க லஞ்சம்: ஒசூா் மாநகராட்சி வரி வசூலா் கைது
ஒசூா்: வீட்டுவரி நிா்ணயம் செய்வதற்கு ரூ. 25 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக ஒசூா் மாநகராட்சி வரி வசூலரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ஒசூரை அடுத்த சின்ன எலசகிரி, ஆா்ஆா் நகரில் புதிதாக வீடுகட்டி வசித்துவரும் முனுசாமி (36) என்பவா் அப்பகுதி குடியிருப்போா் நலச் சங்கத்தின் தலைவராக உள்ளாா். இவரது சங்கத்தை சோ்ந்த பொருளாளா் மாது என்பவா் தனது மனைவி துளசிமணியின் பெயரில் உள்ள வீட்டுக்கு, வீட்டுவரி ரசீது வாங்கி தருவதற்காக முனுசாமியிடம் உதவி கோரினாா்.
இதையடுத்து வீட்டுவரி ரசீது பெறுவதற்கான ஆவணங்களை எடுத்துக் கொண்டு ஒசூா் மாநகராட்சி அலுவலகத்தில் வரி வசூலராக (பில் கலெக்டா்) பணிபுரியும் ரஜினியைச் சந்தித்து ஆவணங்களை அளித்து வீட்டு வரி விதித்து சான்று வழங்குமாறு கேட்டுள்ளாா்.
இதற்கு ரூ. 25 ஆயிரம் லஞ்சமாக தரவேண்டும் என ரஜினி கூறியதால் கிருஷ்ணகிரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை ஆய்வாளா் ரவியிடம் முனுசாமி புகாா் அளித்தாா். அதன்பேரில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து போலீஸாா் கொடுத்து அனுப்பிய ரசாயனம் தடவிய ரூ. 25 ஆயிரத்தை லஞ்சமாக ரஜினியிடம் முனுசாமி தந்தபோது அங்கு மறைந்திருந்த போலீஸாா் ரஜினியைக் கைது செய்தனா்.