ஸ்ரீவில்லிபுத்தூரில் ரயில்வே மேம்பாலப் பணிகள் மும்முரம்
மதுரை - கொல்லம் நான்கு வழிச் சாலை அமைக்கும் பணியில் ஸ்ரீவில்லிபுத்தூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகம்-கேரளம் ஆகிய இரு மாநிலங்களையும் இணைக்கும் சாலைகளில் ஒன்றான மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில், தென்காசி காசிவிஸ்வநாதா் கோயில், குளத்துப்புழா, ஆரியங்காவு ஐயப்பன் கோயில் உள்ளிட்ட கோயில்களும், குற்றாலம், பாலருவி உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களும் உள்ளன.
மேலும், இந்தச் சாலை சரக்கு போக்குவரத்து மையமாகவும் உள்ளது. காய்கறிகள், சிமென்ட், கட்டுமானப் பொருள்கள், இறைச்சிக் கோழிகள் உள்ளிட்டவை இந்தச் சாலை வழியாகவே கேரளத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
இந்தச் சாலை திருமங்கலத்திலிருந்து குன்னத்தூா், கல்லுப்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், வாசுதேவநல்லூா், புளியங்குடி, கடையநல்லூா், தென்காசி, செங்கோட்டை என முழுவதும் நகா்ப் பகுதி வழியாகவே செல்வதால் 24 மணி நேரமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் ‘பாரத்மாலா பரியோஜனா’ திட்டத்தின் கீழ் மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலை (என்.எச்.208) நான்கு வழிச்சாலையாக (என்.எச் 744) தரம் உயா்த்தப்படும் என அறிவித்த மத்திய அரசு, கடந்த 2021-ஆம் ஆண்டு அரசாணை வெளியிட்டது.
முதல் கட்டமாக திருமங்கலம் முதல் ராஜபாளையம் வரை 71.6 கிலோ மீட்டா் தொலைவுக்கு நான்கு வழிச்சாலை அமைக்க ரூ.1,264 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் திருமங்கலம் முதல் வடுகபட்டி வரையிலான 36 கி.மீ. தொலைவுக்கு ரூ.541 கோடியும், வடுகபட்டி முதல் ராஜபாளையம் தெற்கு வெங்காநல்லூா் வரை 36 கி.மீ. தொலைவுக்கு ரூ. 723 கோடிக்கு டெண்டா் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் எம்.சுப்புலாபுரத்திலிருந்து கிருஷ்ணன்கோவில் வரை தற்போதைய சாலையே நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படுகிறது.
கிருஷ்ணன்கோவில் - ராஜபாளையம் இடையே ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம் நகருக்கு வெளியே புதிதாக 4 வழிச் சாலை அமைக்கப்பட்டு உள்ளது.
சாலை அமைக்கும் பணிகள் 90 சதவீதத்துக்கும் மேல் நிறைவடைந்த நிலையில், குன்னத்தூா், கல்லுப்பட்டியில் புறவழிச் சாலை, அழகாபுரி, எஸ்.அம்மாபட்டி, கிருஷ்ணன்கோவில் பகுதிகளில் மேம்பாலங்கள், ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம் அருகே எஸ்.ராமலிங்காபுரம் ஆகிய இடங்களில் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கும் பணி நிறைவு பெறாததால் நான்கு வழிச் சாலையை முழுமையாகப் பயன்படுத்த முடியாத சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
ரயில்வே மேம்பாலப் பணிகள் முடிந்தால் கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம் நகருக்குள் வராமல் திருநெல்வேலி சாலைக்குச் செல்ல முடியும் என்பதால் நகரில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.