140 கோடி மக்களில் ஒருவராக... கானா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை!
உலகின் வளர்ச்சிக்கு உந்து விசையாக இந்தியா இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
பிரிக்ஸ் மாநாட்டையொட்டி பிரான்ஸ் செல்வதற்கு முன்னதாக 8 நாள்களில் 5 நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதில், கானா, ட்ரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
முதல் நாளான நேற்று(ஜூலை 2) கானா தலைநகர் அக்ராவுக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு, விமான நிலையத்தில் கானாவின் பாரம்பரிய முறைப்படி 21 துப்பாக்கிகள் ஏந்தி வரவேற்பு அளிக்கப்பட்டது. கானா அதிபர் ஜான் திராமணி மஹாமா பிரதமர் நரேந்திர மோடியை கட்டியணைத்து வரவேற்றார்.
பிரதமராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக கானாவுக்குச் செல்லும் மோடி, 30 ஆண்டுகளுக்குப் பிறகு கானாவுக்குச் செல்லும் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அவருக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
கானா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் இன்று உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், “மரியாதைக்குரிய கானா நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதில் இருப்பது மிகவும் பெருமைக்குரியது. ஜனநாயக உணர்வை வெளிப்படுத்தும் கானாவிலிருப்பதில் நான் மிகவும் பாக்கியசாலி.
உலகின் 140 கோடி மக்கள் வாழும் இந்தியாவிலிருந்து ஒரு பிரதிநிதியாக நல்லெண்ணம் மற்றும் வாழ்த்துகளை உங்களுக்காக கொண்டுவந்திருக்கிறேன். கானா தங்கத்தின் நாடு. தங்கம் உங்கள் மண்ணுக்கு கீழ் மட்டும் இல்லை. உங்களது இதயத்திலும் இருக்கிறது.
ஆருயிர் நண்பர் மஹாமாவின் கைகளில் இருந்து நாட்டின் உயரிய விருது அளித்த கானாவிற்கு, 140 கோடி மக்கள் கொண்ட இந்தியாவின் சார்பில் நன்றி.
2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற மக்கள் முடிவுசெய்திருக்கின்றனர்” என்றார்.
PM Narendra Modi Addressing the Parliament of the Republic of Ghana
இதையும் படிக்க... ஜூலை 19ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்! - மத்திய அரசு