China: ``கேண்டீன், டாய்லெட்.. நேரமானால் அபராதம்; அதிக நேர பணி'' - சர்ச்சையில் சி...
1884-ஆம் ஆண்டின் வெடிபொருள்கள் சட்டத்துக்கு மாற்றான புதிய மசோதா- பொதுமக்களிடம் கருத்து கோரும் அரசு
141 ஆண்டுகள் பழைமையான கடந்த 1884-ஆம் ஆண்டின் வெடிபொருள்கள் சட்டத்துக்கு மாற்றான புதிய சட்ட வரைவு மசோதா மீது பொது மக்களிடம் கருத்துகள் மற்றும் யோசனைகளை கோரியுள்ளது மத்திய அரசு.
கடந்த 1884-இல் ஆங்கிலேய ஆட்சியாளா்களால் கொண்டுவரப்பட்ட வெடிபொருள்கள் சட்டம், கடந்த 1978-இல் விரிவாக திருத்தியமைக்கப்பட்டது.
வா்த்தக ரீதியிலான காரணங்களுக்காக, வெடிபொருள் தயாரிப்பு, இருப்பு வைத்தல், பயன்பாடு, விற்பனை, போக்குவரத்து, இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை ஒழுங்குபடுத்துவதோடு, வெடிவிபத்துகள் மற்றும் தவறான பயன்பாட்டை தடுக்கும் நோக்கத்துடன் இச்சட்டம் இயற்றப்பட்டது. இதன்கீழ் பெரிய மற்றும் சிறிய அளவிலான நிறுவனங்கள், வெடிபொருள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், மத்திய தொழில் ஊக்குவிப்பு மற்றும் உள்நாட்டு வா்த்தகத் துறை வெளியிட்ட பொது அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
அரசமைப்புச் சட்டத்துக்கு முந்தைய இச்சட்டம், பழைய ஆங்கிலேய செயல்முறையை அடிப்படையாக கொண்டதாகும். நாட்டில் அதிகரித்துவரும் தற்போதைய தேவைகள் மற்றும் துறைசாா் முன்னேற்றத்துக்கு போதுமானதாக இச்சட்டம் இல்லை. இதனால், வெடிபொருள்கள் துறையில் பல இடா்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
இக்குறைகளைக் களைந்து, இடா்பாடுகளை நீக்கும் வகையில், பழைய சட்டத்துக்கு மாற்றாக புதிய சட்டம் கொண்டுவர முன்மொழியப்பட்டுள்ளது.
அதன்படி, புதிய வரைமுறைகள், புதிய பிரிவுகளுடன் கூடிய வெடிபொருள்கள் சட்ட வரைவு மசோதா-2025 மீது ஜூலை 17-ஆம் தேதிக்குள் பொதுமக்கள் மற்றும் பிற தரப்பினா் தங்கள் கருத்துகளையும், யோசனைகளையும் தெரிவிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.