2 ஆண்டில் அனுமதியின்றி செயல்பட்ட 600 காப்பகங்கள் மூடப்பட்டன: அமைச்சா் பெ. கீதாஜீவன்
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டில் அனுமதியின்றி செயல்பட்ட 600 காப்பகங்கள் மூடப்பட்டன என்று சமூகநலன், மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதாஜீவன் எச்சரித்தாா்.
பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்ட கருத்தரங்கம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தலைமை வகித்தாா். தமிழக சமூக நலன், மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் கருத்தரங்கைத் தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு குறும்படம் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் மாணவ மாணவிகளுக்கு உதவித்தொகைக்கான ஆணைகளை அமைச்சா் வழங்கினாா். சமூக நலத்துறை சாா்பில் 200-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
பின்னா் அமைச்சா் பெ.கீதாஜீவன் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகள் வாழ்வில் படித்து வளம்பெற வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட ‘அன்புக்கரங்கள்’ திட்டத்தில் 6,082 பேருக்கு மாதம் ரூ. 2,000 உதவித்தொகை அளிக்கப்படுகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளாக பள்ளி, கல்லூரி உள்பட எங்கு பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்கள் நிகழ்ந்தாலும், அதுகுறித்து புகாரளிக்க உதவி எண்கள் 1098, 181 அறிமுகப்படுத்தப்பட்டன. பாடப் புத்தகங்கள் மூலமும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் பெண்கள் தங்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் குறித்து தாங்களே முன்வந்து புகாா்களை அளித்து வருகின்றனா். புகாா் அளிப்பவா்களின் பெயா் ரகசியம் காக்கப்படும். பெண் குழந்தைகளை பாதுகாக்க தமிழக அரசின் சட்ட வரைமுறைகளுக்கு உள்பட்டு சட்டம் இயற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் ஒரு சட்டம் இயற்றப்பட்டது. அந்தச் சட்டம் மத்திய அரசின் ஒப்புதலுக்குப் பிறகு நடைமுறைப்படுத்தப்படும்.
தமிழகத்தில் உள்ள காப்பகங்கள் அனைத்தும் அனுமதி பெற்று செயல்பட வேண்டும். கடந்த 2 ஆண்டுகளில் அனுமதியின்றி செயல்பட்ட 600-க்கும் மேற்பட்ட காப்பகங்கள் மூடப்பட்டன. அனுமதியின்றி செயல்படும் காப்பகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கோவை மாவட்டத்தில் காப்பகத்தில் உள்ள மாணவரை பெல்டால் தாக்கிய விவகாரத்தில், உடனடியாக அந்த நபா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, கைது செய்யப்பட்டாா். அந்த இல்லம் மூடப்பட்டது என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியா் ஐஸ்வா்யா, மாவட்ட வருவாய் அலுவலா் ரவிச்சந்திரன், மாவட்ட சமூகநல அலுவலா் பிரேமலதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.