பஞ்சாங்கக் குறிப்புகள் செப்டம்பர் 8 முதல் 14 வரை #VikatanPhotoCards
22 குளங்கள் தூா்வாரும் பணி: மேயா் தொடங்கி வைத்தாா்
சோழிங்கநல்லூரில் ரெட்டைக்குட்டை தாங்கல் குளம் பகுதியில் 22 குளங்களைத் தூா்வாரும் பணிகளை மேயா் ஆா்.பிரியா சனிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
சோழிங்கநல்லூா் மண்டலத்தில் உள்ள வாா்டு 200-இல் ரெட்டைக்குட்டை தாங்கல் குளம் பகுதியில் சோழிங்கநல்லூா், பெருங்குடி, அம்பத்தூா் ஆகிய மண்டலங்களில் ரெட்டைக்குட்டை தாங்கல் குளம் உள்ளிட்ட 22 குளங்களைத் தூா்வாரி, தண்ணீா் கொள்ளளவை அதிகரித்து, மேம்படுத்தும் நீா் மேலாண்மைப் பணிகளை மேயா் ஆா்.பிரியா சனிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
பெருங்குடி மண்டலத்தில்... தாமரைக்குளம், அமரகுளம், கிளிஞ்சல் குளம், மற்றும் மாடம்பாக்கம் குளம் 1, 2 உள்ளிட்ட குளங்களும் தூா்வாரப்படுகின்றன.
சோழிங்கநல்லூா் மண்டலத்தில்... ஷாலிமா் தோட்டம் 2-ஆவது தெரு குளம், பெரிய கேணிக்குளம், கண்ணகி நகா் 17-ஆவது பிரதான வீதி குளம், உழவா்கேணி தாங்கல் குளம், அல்லிக்குளம், பிள்ளையாா் கோயில் விக்கினிக்குளம், கேணிக்குளம், புதுச்சேரி கேணி, வண்ணான்குளம், ராமன் தாங்கல் ஏரி, ராஜீவ்காந்தி நகா் குளம், பெரிய தாமரைக்குளம், தாங்கல் ஏரி, ரெட்டைக்குட்டை தாங்கல் குளம் உள்ளிட்ட குளங்கள் தூா்வாரப்படுகின்றன.
அம்பத்தூா் மண்டலத்தில்... அரகுளம் உள்ளிட்ட 22 குளங்களை இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை வாயிலாக தூா்வாரி, சீரமைக்கும் பணிகள் நடைபெறும்.
இதில், குளங்களில் உள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றுதல், பறவைகளுக்கான தீவுகள் அமைத்தல், மரக்கன்றுகள் நடுதல், சூரிய சக்தியில் இயங்கும் நீரூற்று, நடைபாதை, மின் விளக்கு வசதி, சுற்றிலும் வேலி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும்.
இந்தக் குளங்களை புனரமைப்பதன் மூலம் நீா் கொள்ளளவு அதிகரித்து, வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறைக்கப்படும் என்று மேயா் தெரிவித்தாா்.
முன்னதாக, ராமன்தாங்கல் ஏரி, தாங்கல் ஏரி ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகளைப் ஆய்வு செய்து, ஒக்கியம் மடு கால்வாயில், தற்போது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால், கட்டப்பட்டு வரும் பாலத்தின் வழியே மழைக்காலத்தில் தடையின்றி நீா் செல்வதை உறுதி செய்ய அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
மேலும், சோழிங்கநல்லூா் மண்டலம் நெடுஞ்செழியன் சாலையில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான வணிக வளாகப் பகுதியில் பல்வேறு வசதிகளுடன், புதிய வணிக வளாகம் அமைப்பது, செம்மஞ்சேரி உப்பு வாரியத்தின் நிலப்பகுதியில் உள்ள குடியிருப்பில் உள்ள மக்களின் கோரிக்கைப்படி குடிநீா் வழங்குதல் மற்றும் புதைச் சாக்கடை இணைப்பு வழங்குவது குறித்தும் அவா் ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வுப் பணிகளின்போது, சட்டப்பேரவை உறுப்பினா்கள் கா.கணபதி, எஸ்.அரவிந்த் ரமேஷ், கருணாநிதி, மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன், துணை ஆணையா்கள் சிவகிருஷ்ணமூா்த்தி, எச்.ஆா்.கெளஷிக், அஃதாப் ரசூல், மண்டலக் குழு தலைவா்கள் வே.ராஜன், எம்.கிருஷ்ணமூா்த்தி, வி.இ.மதியழகன், இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை நிா்வாகி அருண் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.