24 விமான நிலையங்களை மே 14 ஆம் தேதி வரை மூட உத்தரவு!
இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் போர்ப் பதற்றம் காரணமாக 24 விமான நிலையங்களை மே 14 ஆம் தேதி வரை மூட மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தின் ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து புது தில்லி மற்றும் இஸ்லாமாபாத் இடையே பதற்றங்கள் அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் 24 விமான நிலையங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
சண்டீகர், ஸ்ரீநகர், அமிர்தசரஸ், லூதியானா, பூந்தர், கிஷன்கர், பாட்டியாலா, சிம்லா, ஜெய்சால்மர், பதான்கோட், ஜம்மு, பிகானர், லே, போர்பந்தர் மற்றும் பிற நகரங்களில் மே 14 ஆம் தேதி வரை விமான நிலையங்கள் மூடப்படும்.
பல விமான நிறுவனங்கள் பயணிகளுக்கான பயணத்துக்கான ஆலோசனைகளையும் வெளியிட்டுள்ளன. ஸ்ரீநகர், ஜம்மு, அமிர்தசரஸ், லே, சண்டிகர், தர்மசாலா, பிகானர், ஜோத்பூர், கிஷன்கர் மற்றும் ராஜ்கோட் ஆகிய இடங்களுக்குச் செல்லும் மற்றும் அனைத்து விமானங்களும் மே 10 ஆம் தேதி நள்ளிரவு வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக இண்டிகோ அறிவித்துள்ளது.
தில்லியின் விமான நிலையத்தில், கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகள் காரணமாக விமான நிலைய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று(மே 9) காலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மொத்தமாக 66 உள்நாட்டு விமான புறப்பாடு மற்றும் வரக்கூடிய 63 விமானங்களும், 5 சர்வதேச புறப்பாடுகள் மற்றும் 4 விமானங்களின் வருகைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: இந்திய ராணுவ நிலைகளை தாக்க பாகிஸ்தான் முயற்சி: கர்னல் சோஃபியா குரேஷி