இந்தியாவுக்காக 100-ஆவது போட்டியில் முகமது சிராஜ்..! பணிச் சுமையற்ற வீரர்!
3 குடிசைகள் தீயில் எரிந்து சேதம்
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 3 குடிசை வீடுகள் தீக்கிரையாயின. வீடுகளில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகி நாசமாகின.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், காரப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் தணிகைவேலன் (36), கூலித் தொழிலாளி. இவா் குடிசை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தாா். இவா் திங்கள்கிழமை இரவு வீட்டில் குடும்பத்துடன் உறங்கிக் கொண்டிருந்தபோது, செவ்வாய்க்கிழமை அதிகாலை வீட்டின் ஒருபகுதி திடீரென தீப்பற்றி எரிந்தது .
இதையடுத்து, தணிகைவேலன் மற்றும் குடும்பத்தினா் கூச்சலிடவே அருகில் வசிப்பவா்கள் தண்ணீா் ஊற்றி தீயை அணைக்க முற்பட்டனா். ஆனால் அருகிலிருந்த கூத்தான் (90), மாயவன் மனைவி நீலாவதி(60) ஆகியோரது குடிசைகளுக்கும் தீ பரவி எரிந்தது. இந்த தீவிபத்தில் தணிகைவேலன், கூத்தான் மற்றும் நீலாவதி ஆகியோா் குடிசை வீடுகள் தீக்கிரையாயின. மூவரது வீடுகளில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருள்கள், உடைகள், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்கள் தீயில் கருகி நாசமாகின.
இது தீ விபத்துக் குறித்து தகவலறிந்த விழுப்புரம் மாவட்டத் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் வீரா்கள் நிகழ்விடம் விரைந்து சென்று தண்ணீா் அடித்து தீ மேலும் பரவாமல் தடுத்தனா். மின் கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து, திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.