`3-வது டிரைமெஸ்டர்ல செக்ஸ் வெச்சுக்கிட்டா சுகப்பிரசவம் நடக்குமா?' - காமத்துக்கு மரியாதை - 235
''தாம்பத்திய உறவுதொடர்பான ஒரு சந்தேகத்துக்கு தீர்வு பெற, பெண் ஒருவர் ஆன்லைனில் தொடர்புகொண்டார். 'எனக்கு சுகப்பிரசவம்தான் நடக்க வேண்டுமென விரும்புகிறேன் டாக்டர். மூன்றாவது டிரைமெஸ்டரில் உறவு வைத்துக்கொண்டால், சுகப்பிரசவம் நடக்க வாய்ப்பிருக்கிறது என்று சொல்கிறார்கள். அது உண்மையா டாக்டர்' என்று கேட்டார். உண்மைதான் என்றேன்'' என்கிற செக்ஸாலஜிஸ்ட் டாக்டர் காமராஜ், அதற்கான மருத்துவ விளக்கத்தை பகிர ஆரம்பித்தார்.
''பொதுவாகவே தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளும்போது மூளையில் இருந்து மகிழ்ச்சி ஹார்மோன்கள் சுரக்கும். இந்த மகிழ்ச்சிக்காகத்தான், மனிதர்கள் காதலிக்கிறார்கள்; தாம்பத்திய உறவும் வைத்துக்கொள்கிறார்கள். இப்போது கர்ப்பிணிகளுக்கு வருவோம். கர்ப்பமாக இருக்கும்போது உறவுகொண்டால், கணவன், மனைவிக்கு மட்டுமல்லாது அவருடைய வயிற்றில் இருக்கும் கருவுக்கும் நல்லது. உறவு வைத்துக்கொள்ளும்போது மூளையில் இருந்து மகிழ்ச்சிக்கான ஹார்மோன்கள் சுரக்கும் என்று சொன்னேன் அல்லவா? அந்த ஹார்மோன் சுரப்பு தாய்க்கு மட்டுமல்லாது அவர் வயிற்றில் இருக்கும் சிசுவுக்கும் நல்லது. மூன்றாவது டிரைமெஸ்டரில், பெண்ணின் வயிறு நன்கு மேடிட்டு இருக்குமென்பதால், ஆண், மனைவியின் வயிற்றில் அழுத்தம் கொடுக்காமல் கவனமாக உறவுகொள்ள வேண்டும்.

இப்போது, தாம்பத்திய உறவு சுகப்பிரசவத்துக்கு எப்படி உதவ முடியும் என்கிற அந்தப்பெண்ணின் கேள்விக்கு வருகிறேன்.
கர்ப்பம் உறுதியானவுடனே 'இந்த மாதம், இந்த தேதியில் பிரசவம் நிகழ வாய்ப்பிருக்கிறது' என்று மகப்பேறு மருத்துவர்கள் தெரிவித்துவிடுவார்கள். 'டாக்டர் சொன்ன அதே மாசம், அதே தேதியில கரெக்டா டெலிவரியாகிடுமா' என்று பலருக்கும் கேள்வி எழும். அந்தத் தேதிக்கு முன்னாலும் பிரசவம் நிகழலாம், பின்னாலும் நிகழலாம். 'தேதி ஓகே; மாசம்கூடவா டாக்டர் மாறும்' என்றும் சிலருக்கு கேள்வி எழும். அதுவும் மாறலாம். எப்படியென்றால், அக்டோபர் முதல் வாரத்தின் ஒரு தேதியில் குழந்தைப் பிறக்கலாம் என மருத்துவர் குறிப்பிட்டிருப்பார். ஆனால், குழந்தை செப்டம்பர் மாதத்தின் இறுதியிலேயே பிறந்துவிடலாம். ஒருவேளை,மகப்பேறு மருத்துவர் குறித்துக்கொடுத்த தேதியைத் தாண்டியும் பிரசவ வலி ஏற்படவில்லையென்றால், அதற்கான தீர்வாக தாம்பத்திய உறவு பயன்படலாம்.
குறிப்பிட்ட டெலிவரி தேதி தாண்டியும் பிரசவ வலி வரவில்லையென்றால், தாயும் சேயும் நலமாக இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்துகொண்டு, ஒருசில நாள்கள் மகப்பேறு மருத்துவர்கள் காத்திருப்பார்கள். ஒருவேளை, குழந்தையைச் சுற்றியுள்ள பனிக்குட நீர் குறைந்துவிட்டால் அது குழந்தையின் உயிருக்கே கூட ஆபத்தாகிவிடலாம். இதுபோன்ற நேரத்தில், சம்பந்தப்பட்ட கர்ப்பிணிகளுக்கு புரோஸ்டாகிளாண்டின்ஸ் (prostaglandins) என்ற மருந்தைத் தந்து சுகப்பிரசவத்துக்கு முயற்சி செய்வார்கள் மகப்பேறு மருத்துவர்கள். இந்த மருந்து கருப்பையின் வாயை விரிவடையச் செய்யும் தன்மை கொண்டது. இதே புரோஸ்டாகிளாண்டின்ஸ் ஆணின் விந்திலும் இருக்கிறது.
பிரசவ தேதி நெருங்கும்போதும் தம்பதியர் உறவுகொண்டால், விந்தில் இருக்கிற புரோஸ்டாகிளாண்டின்ஸ் கருப்பையின் வாயை விரிவடையச் செய்து, பிரசவ வலியை ஏற்படுத்திவிடும். இதனால், சுகப்பிரசவம் நிகழவும் வாய்ப்பிருக்கிறது. மூன்றாவது டிரைமெஸ்டரில் உறவு வைத்துக்கொண்டால் சுகப்பிரசவம் நடக்க வாய்ப்பிருப்பதாக நீங்கள் கேள்விபட்டது மருத்துவரீதியாக உண்மைதான் மேடம்'' என்று அவருக்கு தெளிவுபடுத்தினேன்.

''மற்றவர்களுக்கு இன்னும் சில விஷயங்களைச் சொல்ல விரும்புகிறேன். கர்ப்ப காலம் முழுவதும் தாம்பத்திய உறவு கொள்ளலாம். அதனால் எந்தப் பிரச்னையும் வராது. ஆனால், தாய்க்கும் சேய்க்கும் இணைப்பாக இருக்கும் நஞ்சு (பிளாசன்டா) கீழே இறங்கியிருந்தால், அதாவது கருப்பை திறக்கும் இடத்தில் அந்த நஞ்சு இருந்தால் உறவைத் தவிர்க்க வேண்டும். அடிக்கடி கருச்சிதைவு ஏற்பட்ட பெண்களும் கர்ப்ப கால செக்ஸை தவிர்க்க வேண்டும். கர்ப்ப காலத்தில் லேசான ரத்தப்போக்கு இருக்கிற பெண்களுக்குக் கருச்சிதைவு ஏற்படலாம். இப்படிப்பட்ட பெண்களும் உறவைத் தவிர்ப்பதே நல்லது. 'கருப்பையில் கிருமித்தொற்று ஏற்படலாம்' என்று அறிவுறுத்தப்பட்ட கர்ப்பிணிகளும் செக்ஸை தவிர்க்க வேண்டும். மற்றவர்கள் கர்ப்ப காலம் முழுதும் செக்ஸ் வைத்துக்கொள்ளலாம்'' என்கிறார் டாக்டர் காமராஜ்.