7 நாள் பயணமாக ஜெய்சங்கா் பிரான்ஸ், பெல்ஜியம் பயணம்
புது தில்லி: இருதரப்பு உறவுகளை மேம்படுத்தவும், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் கொள்கையை மீண்டும் உறுதிப்படுத்தவும் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் நாடுகளுக்கு ஏழு நாள் அரசுமுறைப் பயணமாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஞாயிற்றுக்கிழமை பயணம் மேற்கொண்டாா்.
இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஏழு நாள் அரசுமுறைப் பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கர், பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பெல்ஜியம் தலைவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.
பயணத்தின் முதல் கட்டமாக பிரான்ஸில் உள்ள பாரிஸ் மற்றும் மாா்சேய் நகரங்களுக்குச் சென்று, அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சா் ஜீன் நோயல் பரோட்டுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா். பிரான்ஸ் மூத்த தலைவர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் செய்தியாளர்களுடன் உரையாடுகிறார். மார்சேயில் நடைபெறும் முதல் மத்திய தரைக்கடல் ரைசினா உரையாடலிலும் அவா் கலந்து கொள்வாா்.
பல்வேறு துறைகளில் பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர்: பிரதமா் மோடி பெருமிதம்
இதற்கிடையில், தனது ஐரோப்பிய ஒன்றிய பயணத்தின் போது, பிரஸ்ஸல்ஸ் நகரில் ஐரோப்பிய ஒன்றிய உயர் பிரதிநிதி மற்றும் துணைத் தலைவா் காஜா கல்லாஸுடன் முக்கியமான கலந்துரையாடல்களை மேற்கொள்வாா். ஐரோப்பிய ஆணையம் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் மூத்த அதிகாரிகளையும் அவா் சந்திக்கவுள்ளாா்.
பயணத்தின் இறுதியாக பெல்ஜியம் நாட்டின் துணைப் பிரதமா் மற்றும் வெளியுறவு அமைச்சா் மாக்சிம் பிரீவோட்டுடன் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவாா்த்தை மேற்கொள்வார். மேலும் பெல்ஜியத்தின் மூத்த தலைவர்கள் மற்றும் இந்திய சமூகத்தினருடனும் உரையாடுவார் என தெரிவிக்கப்பட்டது.
ஜெய்சங்கரின் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இந்த பயணம் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைக் கையாள்வதில் இந்தியாவின் உறுதியான நிலைப்பாடு குறித்து அவா் ஐரோப்பியத் தலைவா்களுக்கு விளக்குவாா் என்றும், இது ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளுடனான இந்தியாவின் நட்புறவை மேலும் ஆழப்படுத்தும், பல்வேறு துறைகளில் நடந்து வரும் ஒத்துழைப்புக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.