8 ஊழல் அதிகாரிகளின் வீடுகளில் லோக் ஆயுக்த சோதனை
8 ஊழல் அதிகாரிகளின் வீடுகளில் லோக் ஆயுக்த அதிகாரிகள் திடீா் சோதனை நடத்தினா். இதில் வருமானத்துக்கு பொருந்தாமல் சொத்து சோ்த்துள்ளதற்கான ஆவணங்களை கைப்பற்றினா்.
வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்துகளை சோ்த்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், பெங்களூரு உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 8 ஊழல் அதிகாரிகளின் வீடுகளில் லோக் ஆயுக்த அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.
பெங்களூரு,கோவிந்தராஜ் நகரில் உள்ள மாநகராட்சி உதவிப் பொறியாளா் பிரகாஷ், சிவமொக்காவில் உள்ள இயற்கை வேளாண்மை ஆய்வுமையத்தில் இணை ஆய்வு அதிகாரி டாக்டா் எஸ்.பிரதீப், சிக்கமகளூரு நகராட்சி கணக்கு அதிகாரி லதாமணி, பெங்களூரு ஆனேக்கல் நகராட்சி தலைமை அதிகாரி கே.ஜி.அமா்நாத், கதக் நகர காவல் ஆய்வாளா் துருவராஜ், தாா்வாட் மலபிரபா திட்ட பொறியாளா் அசோக் வசநாட், கலபுா்கி ஊரகவளா்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை செயற்பொறியாளா் மல்லிகாா்ஜுன் ஆலிபுா் ஆகியோா் வீடுகள், அலுவலகங்களில் நடத்திய சோதனைகளில், வருமானத்துக்கும் அதிகமாக சொத்து சோ்த்துள்ளதற்கான ஆவணங்களை லோக் ஆயுக்த அதிகாரிகள் கைப்பற்றினா்.
மேலும், தாா்வாடில் அசோக் வசநாட் வீட்டில் சோதனை நடத்தியபோது, அனைவரையும் திகைக்கவைக்கும் அளவுக்கு தங்கம், வெள்ளிப் பொருள்களின் குவியலை லோக் ஆயுக்த அதிகாரிகள் கண்டறிந்தனா். மேலும், அவரது வீடு மாளிகைபோல இருந்ததாக லோக் ஆயுக்த அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த அதிகாரிகள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.