Fair Delimitation: "இது பா.ஜ.க வின் ஆதிக்கத்திற்கு வழிவகுக்கும்"-கேரள முதல்வர் பினராயி விஜயன்
மத்திய அரசின் மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு ஒருங்கிணைக்கும் 7 மாநில பிரதிநிதிகள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னை ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்று வருகிறது.
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, பஞ்சாப் ஆகிய மாநில முதல்வர், ஒடிசா முன்னாள் முதல்வர் உள்ளிட்ட 7 மாநிலங்களைச் சேர்ந்த 29 அரசியல் கட்சி தலைவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.
இதில் பேசியிருக்கும் கேரள முதல்வர் பினராயி விஜயன், "மக்கள் தொகை அடிப்படையில் மத்திய பா.ஜ.க அரசு தொகுதி மறுவரையறையைக் கொண்டு வருவது தென்னிந்தியாவிற்கு இழைக்கும் அநீதியாகும். அதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.
மாநிலங்களுக்கான நிதியை சரியாகக் கொடுக்காமல் பல வகையில் தென் மாநிலங்களுக்கு அநீதியை இழைத்து வரும் மத்திய அரசு, இப்போது மீண்டும் எம்.பி சீட்களைக் குறைத்து அநீதி இழைக்க முயற்சி செய்கிறது.

பன்முகத்தன்மையே இந்தியாவின் பலம். மத்திய அரசு மாநிலங்களுடன் அர்த்தமுள்ள உரையாடலைத் தொடங்க வேண்டும். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாகத் தெளிவுபடுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை.
தொகுதி மறுசீரமைப்பு என்பது நமது கழுத்தின் மேல் தொங்கிக் கொண்டிருக்கும் கத்தி போன்றது. தென் மாநிலங்களின் எம்.பி சீட்களின் எண்ணிக்கை குறைவது பாஜகவின் ஆதிக்கத்திற்கு வழிவகுக்கும். குறுகிய அரசியல் லாபத்திற்காகத் தொகுதி மறுசீரமைப்பைப் பயன்படுத்த பாஜக நினைக்கிறது." என்று பேசியிருக்கிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
