Kantara Chapter 1: "மழை, காற்று, பயம்..." - நீந்திப் பிழைத்த படக்குழு; அனுமதியில்லாமல் படப்பிடிப்பா?
கன்னட படமான காந்தாரா: சேப்டர்1 படப்பிடிப்பின்போது தொடர்ந்து புதுப்புது சவால்கள் வந்து கொண்டே இருக்கின்றன. ஏற்கனவே இப்படப்பிடிப்பின் போது கடந்த ஒரு மாதத்தில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த 3 ஊழியர்கள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளனர்.
தற்போது மேலும் ஒரு சம்பவமாக இப்படப்பிடிப்பு கர்நாடகா அணைப்பகுதியில் நடந்தபோது படகு கவிழ்ந்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள சிவமோகா மாவட்டத்தில் இருக்கும் மாணி அணைப்பகுதியில் காந்தாரா படத்தின் படப்பிடிப்பு நடந்தது.

இதில் நடிகர் ரிஷப் ஷெட்டி உட்பட நடிகர்கள் மற்றும் படப்பிடிப்பு குழுவினர் என 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.
ஆற்றில் படகில் சென்று கொண்டிருந்தபோது கடுமையான காற்று வீசியதால் படகு கவிழ்ந்தது. இதனால் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் நீரில் தத்தளித்தனர்.
அதிர்ஷ்டவசமாகப் படகு கவிழ்ந்த இடத்தில் நீரின் ஆழம் சற்று குறைவாக இருந்தது. இதனால் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் நீச்சல் அடித்தபடி கரைக்கு வந்து உயிரைக் காப்பாற்றிக்கொண்டனர்.
இந்தச் சம்பவத்தில் படப்பிடிப்பு குழுவினர் வைத்திருந்த கேமரா மற்றும் இதர உபரகணங்கள் தண்ணீருக்குள் விழுந்துவிட்டது. இதனால் படத்தயாரிப்பு குழுவிற்குப் பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்துப் படப்பிடிப்பில் பங்கேற்ற ஊழியர் ஒருவர் கூறுகையில், ''படகில் ஏறி அணையில் சென்றபோது படப்பிடிப்பு குழுவினர் மிகவும் பயத்திலிருந்தனர். அந்நேரம் மழை பெய்து கொண்டிருந்தது. அளவுக்கு அதிகமான காற்று வீசியதால் படகு மிகவும் ஆடியது. காற்றின் வேகத்தால் திடீரென படகு தண்ணீரில் கழிந்துவிட்டது.

அதிர்ஷ்டவசமாகப் படகு தண்ணீர் ஆழம் குறைவான பகுதியில் கவிழ்ந்ததால் உயிரிழப்புகள் எதுவும் நடக்கவில்லை. இந்த சம்பவத்தால் அனைவரும் மிகவும் பயத்தில் இருக்கிறோம். தண்ணீருக்குள் விழுந்த கேமரா போன்றவற்றை இன்னும் எடுக்கவில்லை'' என்றார்.
இது குறித்துக் கேள்விப்பட்டதும் போலீஸார் விரைந்து வந்து விசாரித்து வருகின்றனர். அணையில் படகு ஒன்றைக் கப்பல் போன்று வடிவமைத்து இருந்தனர்.
அந்தக் கப்பலில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு இருந்தனர். ஆனால் அளவுக்கு அதிகமான காற்று மற்றும் மழையால் படகு கவிழ்ந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு பொதுவாக யாரையும் அனுமதிப்பதில்லை. காந்தாரா படப்பிடிப்பும் மிகவும் ரகசியமாகத்தான் நடந்தது. அதோடு ஆழமில்லாத தண்ணீரில் படப்பிடிப்புக்காக மிகப்பெரிய ஷெட் போடப்பட்டு இருந்ததாகப் படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து பல சவால்கள் வந்து கொண்டிருந்தபோதிலும் படப்பிடிப்பை முடித்துவிடவேண்டும் என்பதில் படத்தயாரிப்பாளர்கள் உறுதியாக இருக்கின்றனர்.
அதேசமயம் அணைப்பகுதியில் படப்பிடிப்பு நடத்த போதிய அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் படத்தயாரிப்பு குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் போதிய அனுமதி பெற்றே படப்பிடிப்பை நடத்தியதாகப் படத்தயாரிப்பு குழு தெரிவித்துள்ளது. அதோடு படகு விபத்தில் தயாரிப்பு உபகரணங்கள் எதுவும் தண்ணீரில் விழவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் படகு விபத்துக்குப் பிறகும் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருவதாகத் தெரிவித்துள்ளனர். 2022ம் ஆண்டு ரிஷப் ஷெட்டி நடித்த காந்தாரா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
அதனைத் தொடர்ந்து இப்போது காந்தாரா: சேப்டர் 1 படம் மிகப்பெரிய பொருட் செலவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. பொதுவாக தட்ஷன கன்னட பகுதியில் படப்பிடிப்பு நடத்துவது என்பது மிகவும் சவாலான ஒன்றாகும். அதையும் மீறி காந்தாரா படக்குழுவினர் படப்பிடிப்புக்குச் சென்றுள்ளனர்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...