UP : பாஜக அலுவலகத்தில் பெண்ணிடம் தகாத நடத்தை... பாஜக நிர்வாகி விளக்கம் அளிக்க கட்சி நோட்டீஸ்
உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் கோண்டாவில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில், ஒரு பெண்ணுடன் பாஜக தலைவர் ஒருவர் நடந்து கொள்ளும் வீடியோ வெளியாகி சர்ச்சையானது. அது குறித்து விளக்கம் அளிக்குமாறு அவருக்கு கட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பாஜக கோண்டா தலைவர் அமர் கிஷோர் காஷ்யப், கட்சி அலுவலகத்தில் தகாத முறையில் நடந்து கொண்டதாக கட்சி ஊழியர் ஒருவர் பாஜக தலைமையிடம் முறையான புகார் அளித்திருக்கிறார்.
இதனை தொடர்ந்து, கிஷோர் காஷ்யப் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்குமாறு கட்சியால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்துக்கொண்டதாக பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் கோவிந்த் நாராயண் சுக்லா, கிஷோர் காஷ்யப்பிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மாநிலத் தலைவரின் அறிவுறுத்தல்களின்படி, ஏழு நாட்களுக்குள் பாஜக மாநில அலுவலகத்திற்கு எழுத்துப்பூர்வ விளக்கத்தை சமர்ப்பிக்குமாறும், குறிப்பிட்ட காலத்திற்குள் சரியான பதிலை வழங்கத் தவறினால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
வைரலான வீடியோவில் சம்பந்தப்பட்ட நபர், அலுவலகத்தில் படிக்கட்டில் நின்று கொண்டிருந்த பெண்ணை அணைத்தது போன்ற காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது. இந்த வீடியோ ஏப்ரல் 12ஆம் தேதி பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து அமர் கிஷோர் கூறுகையில், `அந்தப் பெண் கட்சியின் உறுப்பினராவார், அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி தான் ஓய்வெடுக்க ஒரு இடம் கேட்டதால் தங்க இடம் கொடுத்ததாகவும் அவரை அழைத்துச் செல்லுகையில் படிக்கட்டில் ஏறும்போது அந்தப் பெண்ணுக்கு தலை சுற்றல் ஏற்பட்டது, நான் அவருக்கு ஆதரவாக கையை பிடித்தேன். என் மீது அவதூறு பரப்புவதற்காக அந்த காட்சிகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன’ என்று கூறியிருக்கிறார்.