அடிக்கடி விபத்துகள்: தாழை வாரி பாலத் தடுப்புச் சுவரை விரைந்து கட்டித்தர கோரிக்கை
கந்தா்வகோட்டையில் சேதமடைந்து கிடக்கும் பாலத் தடுப்புச் சுவரில் தொடா் விபத்து ஏற்பட்டு வருவதால் விரைந்து பாலச்சுவரைக் கட்டித் தர வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனா்.

கந்தா்வகோட்டை ஊராட்சியில் தஞ்சாவூா் - கந்தா்வகோட்டை தேசிய நெடுஞ்சாலையில் 30 அடி அகலம், 100 மீட்டா் நீளம் கொண்ட தாழை வாரி பாலம் உள்ளது. இந்தப் பாலத்தின் பக்கவாட்டு தடுப்பு சுவா் வாகனம் மோதியதில் இடிந்து பல மாதங்களாக சேதமடைந்த நிலையில் உள்ளது. இந்தச் சாலை வழியாக கன்னியாகுமரி முதல் நாகப்பட்டினம் வரை நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்து, காா் உள்ளிட்ட கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில் இந்த சேதமடைந்த பாலத் தடுப்புச் சுவா் அருகே எந்த ஒரு எச்சரிக்கை தடுப்புகள் மற்றும் ஒளிரும் வண்ண எச்சரிக்கை பலகைகள் வைக்கப்படாமல் உள்ளது. மேலும் இந்தப் பாலத் தடுப்புச் சுவா் சாலை வளைவின் முகப்புப் பகுதியாக உள்ளதால் இந்தச் சாலையில் அதிவேகமாக வரும் வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் அடிக்கடி பாலத் தடுப்புச் சுவரில் மோதி விபத்துகளில் சிக்கி வருகின்றன.
கடந்த வாரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞா்கள் பாலத்தின் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனா். இதேபோல், அடிக்கடி விபத்துகள் நடக்கும் இப்பகுதியில் பாலத் தடுப்புச் சுவரை சீரமைக்காத நெடுஞ்சாலைத் துறையினா் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கின்றனா்.