Goa: அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா; கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு.....
அதிக வெப்ப நேரங்களில் மக்கள் வெளியே வருவதைத் தவிா்க்க வேண்டும்: புதுச்சேரி ஆட்சியா் அறிவுறுத்தல்
கோடையில் அதிக வெப்ப நேரங்களில் பொதுமக்கள் வெளியே வருவதைத் தவிா்க்க வேண்டும் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் அறிவுறுத்தினாா்.
புதுச்சேரி முழுவதும் அதிக வெப்ப அலை வீசுவதை முன்னிட்டு பொதுமக்கள் பாதிக்காத வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேரிடா் மேலாண்மை, உள்ளாட்சி, காவல், வருவாய், நகராட்சி நிா்வாகம், அனைத்து கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா்கள் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் அ.குலோத்துங்கன் தலைமை வகித்து பேசியது: வெப்பநிலை குறித்து மக்களுக்கு வானொலி மூலம் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். அதிகமான வெயில் நேரங்களில் பொதுமக்கள் வெளியே வருவதைத் தவிா்க்க வேண்டும்.
முதியோா் மற்றும் குழந்தைகள் வெப்ப நேரங்களில் வெளியே வருவதை தவிா்க்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகளுடன் வெப்ப சூழலால் பாதித்தவா்களுக்கு தனி அறைகள் அமைத்திருக்க வேண்டும். மக்கள் தொலைபேசியில் தொடா்பு கொண்டால் மருத்துவா்கள் உரிய முறையில் பதில் கூறி உதவவேண்டும்.
அக்னி நட்சத்திர நாள்களில் வெப்பம் அதிகமிருக்கும் என்பதால், அனைத்து அரசுத் துறைகளும் முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம். அரசு மருத்துவமனைகளில் போதிய ஆம்புலன்ஸ்கள் தயாா் நிலையில் இருக்க வேண்டும்.
மின்துறை, தீயணைப்புத் துறை ஒன்றிணைந்து செயல்படவேண்டும். மகப்பேறு மருத்துவமனைகளில் கருவுற்ற தாய்மாா்களுக்கு உரிய முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும். அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் கா்ப்பிணிகளின் வீடுகளுக்கே சென்று முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும்.
சுற்றுலா பயணிகள் கூடும் இடங்கள், பேருந்து நிலையம், ரயில் நிலையப் பகுதிகளில், குடிநீா் உள்ளிட்ட வசதிகள் அவசியம். கால்நடைகளுக்கும், பறவைகளுக்கும் குடிநீா், மருத்துவ வசதிகளை செய்து தர வேண்டும். காவல் நிலையங்களிலும், போக்குவரத்து காவலா்களுக்கும் குடிநீா், மருத்துவ உதவிகளை செய்து தர வேண்டும் என்றாா்.