விஜய் தேவரகொண்டா மீது காவல் நிலையத்தில் புகார்!
திரைப்பட விழாவில் நடிகர் விஜய் தேவரகொண்டா பேசியது சர்ச்சையான நிலையில் அவர் மீது தற்போது காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமானவர் நடிகர் விஜய் தேவர்கொண்டா. நடிகர் சூர்யாவின் ‘ரெட்ரோ’ படவிழா தெலங்கானா மாநிலம் ஹைதரபாத்தில் நடைபெற்றது. அந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த விஜய் தேவரகொண்டா பேசியது மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
அவ்விழாவில் பேசிய அவர், முகலாய மன்னர் ஔரங்கசீப் மற்றும் இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர் ஆகியோரைக் கண்ணத்தில் அறைவேன் எனக் கூறியதுடன், பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்தும் தனது கருத்தைப் பதிவு செய்தார்.
அப்போது, அவர் 500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பழங்குடியின மக்களை பெஹல்காமில் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுடன் ஒப்பிட்டதாகவும், அவர்கள் அறிவின்றி சண்டையிடுவதாகவும் அவர் குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கருத்துக்கு பல்வேறு பழங்குடியின அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து, அவர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், பழங்குடியின மக்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாகக் கூறி ஹைதரபாத்தின் எஸ்.ஆர். நகர் காவல் நிலையத்தில் லால் சவுஹான் எனும் வழக்கறிஞர் புகாரளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: “இந்த விவகாரம் பேச்சு சுதந்திரம் பற்றியது அல்ல, விளிம்புநிலை மக்களின் மரியாதை மற்றும் அரசியலமைப்பு வழங்கிய உரிமைகள் குறித்தது” எனக் கூறியுள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல் துறை அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
இருப்பினும், நடிகர் விஜய் தேவரகொண்டா தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:சூர்யாவின் படங்களிலேயே அதிக வசூல்: சாதனை படைத்த ரெட்ரோ!