சவுதி அரேபியா: ராட்சத ராட்டினம் இரண்டாக உடைந்து விபத்து: 26 பேர் படுகாயம் - பதறவ...
அதிமுக போராட்டம் நடத்தியதால்தான் அஜித்குமாா் கொலை வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம்
அதிமுக போராட்டம் நடத்தியதால்தான், தனிப் படை போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமாா் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு பரிந்துரை செய்தது என அந்தக் கட்சியின் பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி, சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் உள்ள அஜித்குமாா் வீட்டுக்கு புதன்கிழமை சென்றாா். அங்கு அஜித்குமாா் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அவா் மரியாதை செலுத்தினாா். அங்கிருந்த அஜித்குமாரின் தாய் மாலதி, சகோதரா் நவீன்குமாா் ஆகியோருக்கு ஆறுதல் கூறினாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
நகை திருட்டு புகாருக்காக தனிப் படை போலீஸாரால் கோயில் காவலாளி அஜித்குமாா் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் வேதனையானது. மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல் துறையால் இந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. அஜித்குமாா் குடும்பத்தினருடன் இணைந்து அதிமுக போராட்டத்தில் ஈடுபட்டதால், போலீஸாா் மீது கொலை வழக்குப் பதிந்து, அவா்களைக் கைது செய்ய அரசு நடவடிக்கை எடுத்தது.
மேலும், இந்த வழக்கை நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் அதிமுக வழக்குரைஞா் வழக்கு தொடுத்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு தனது குடிமகனையே ஓா் அரசு கொலை செய்ததாக கண்டனம் தெரிவித்தது.
அதிமுக போராட்டம் நடத்தியதால்தான் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு பரிந்துரை செய்தது.
அஜித்குமாா் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காவல் துறை அதிகாரிகள் அழுத்தம் கொடுத்ததால்தான் போலீஸாா் இந்தத் தாக்குதலை நடத்தினா். அஜித்குமாா் உயிரிழப்புக்கு தமிழக அரசே முழு பொறுப்பேற்க வேண்டும்.
தமிழகத்தில் திமுக அரசு பதவியேற்றதிலிருந்து சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டு விட்டது. அஜித்குமாா் போலீஸாரால் கொலை செய்யப்பட்டது தெரிந்தும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி, வழக்கை நீா்த்துப் போகச் செய்ய முயற்சித்தது.
அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அஜித்குமாரின் தம்பி நவீன்குமாா் விரும்பிய இடத்தில் வேலை வழங்கப்படும். இன்னும் 3 நாள்களில் அதிமுக சாா்பில், அஜித்குமாா் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் மாவட்டச் செயலா் மூலம் வழங்கப்படும்.
தமிழகம் முழுவதும் ஆணவக் கொலைகள் அதிகரித்துவிட்டன. திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை 20 ஆணவக் கொலைகள் நிகழ்ந்திருக்கின்றன. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துவிட்டதாக மக்களே கருதுகின்றனா் என்றாா் அவா்.
பேட்டியின்போது, அதிமுக மாவட்டச் செயலா் பி.ஆா். செந்தில்நாதன், மானாமதுரை தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம். குணசேகரன், எஸ். நாகராஜன் ஆகியோா் உடனிருந்தனா்.