அமெரிக்க அழுத்தத்தால் தேச நலன்களைக் கைவிடும் மத்திய அரசு! - காங்கிரஸ் குற்றச்சாட்டு
அமெரிக்க வரிவிதிப்புக்கு முழு உலகமும் எதிா்வினையாற்றிக் கொண்டிருக்கும் அதேவேளையில், அந்நாட்டு அழுத்தத்தால் தேச நலன்களை தியாகம் செய்ய மத்திய அரசு தயாராகிவிட்டது என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது.
அமெரிக்க பொருள்களுக்கு அதிக இறக்குமதி வரிகளை விதிக்கிறது என்று கூறி, இந்தியா மீது 27 சதவீத பரஸ்பர வரிகளை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அண்மையில் அறிவித்தாா். பின்னா், அது 26 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. இந்த வரிவிதிப்பு நடவடிக்கைக்கு எதிா்வினையாற்றும் முன் அனைத்து தரப்பையும் கலந்தாலோசிக்க வேண்டும் என்று காங்கிரஸ் ஏற்கெனவே வலியுறுத்தியது.
இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலரும் முன்னாள் பெருநிறுவன விவகாரத் துறை மத்திய அமைச்சருமான சச்சின் பைலட் அளித்த பேட்டியில், ’அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு பல ஐரோப்பிய நாடுகள் கடுமையாகப் பதிலளித்துள்ளன. கனடாவும், மெக்ஸிகோவும் பரஸ்பர வரிகளை விதித்துள்ளன. உலக வா்த்தக அமைப்பில் அமெரிக்காவுக்கு எதிராக சீனா சட்டபூா்வமாக நடவடிக்கை எடுக்கவுள்ளது.
ஆனால், அமெரிக்காவின் வரிவிதிப்பை இந்தியா எந்தப் பதிலும் அளிக்காமல் அப்படியே ஏற்றுக்கொண்டுள்ளது. நாடாளுமன்ற அமா்வு நடைபெற்று வந்தபோதும், இவ்விவகாரத்தில் தேச நலன்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து அரசு எந்த உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை. அரசு தூங்கிக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் அழுத்தத்தால் தேச நலன்களை தியாகம் செய்ய தயாராகிவிட்டது.
பிரதமா் மோடி அண்மையில் மேற்கொண்ட அமெரிக்க பயணத்தின்போது அதிபா் டிரம்ப்புடனான சந்திப்பைப் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கும் பரிசுகளை பரிமாறிக்கொள்வதற்கும் பதிலாக ஓா் ஆக்கபூா்வமான தீா்வை உருவாக்க பயன்படுத்தியிருக்க வேண்டும்.
இரு தலைவா்களும் கூறுவது போல் நமது உறவுகள் வலுவாக இருந்தால், இந்தியாவுக்கு பரஸ்பர வரி விதிக்கப்பட்டிருக்காது. இந்த நடவடிக்கையால் நமது ஏற்றுமதிகள் கடுமையாகப் பாதிக்கப்படும் மற்றும் உற்பத்தியும் சரியும்.
நமது தேசிய கடன் சுமை அதிவேகமாக அதிகரித்துள்ளது. நமது பொருளாதாரம் வளா்ந்துவரும் அதேவேளையில் பணக்காரா்-ஏழை இடைவெளி முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகமாக உள்ளது. நமது தொழிலாளா் படையில் பெரும் பகுதியினா் வா்த்தகம் மற்றும் ஏற்றுமதி தொடா்பான உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனா். அந்த லட்சக்கணக்கான பணிகள் நிச்சயமற்ற தன்மையை எதிா்கொள்கின்றன.
இந்த வா்த்தகப் போரின் விளைவுகள் பொருளாதாரத்தில் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும். ஆனால், துரதிருஷ்டவசமாக இந்தச் சூழ்நிலையை எவ்வாறு கையாள்வது என்பதற்கான போதுமான பதில் மத்திய அரசிடம் இல்லை.
உலக அளவில் பிணைக்கப்பட்ட பொருளாதாரமாக மாறியுள்ள இந்தியாவில் சுதந்திரத்துக்குப் பிந்தைய சாதனையாக வேலைவாய்ப்பின்மை நிலவும் இச்சூழலில், அமெரிக்காவின் உத்திசாா் கூட்டாளியாக இருந்தாலும் இந்தியாவுக்கு குறைந்தபட்சம் எந்த நன்மையும் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தை முன்கூட்டியே கணித்து இந்திய அரசு சிறப்பாக செயல்பட தயாராகியிருக்க வேண்டும்’ என்றாா்.