பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வர்! ஒப்புதல் பெற்ற 10 மசோதாக்களில் இருப்பது என...
அமெரிக்க பெண் அதிகாரிக்குப் பாலியல் தொல்லை - திருச்சி இன்ஜினீயர் சிக்கிய பின்னணி!
சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் கொடுத்த புகாரில், இந்திய குடிமகன் ஒருவர், அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரை இணையதளத்தில் பின்தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்து வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் மேனகா தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர். அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணுக்கு சமூகவலைதளங்கள் மூலம்தான் பாலியல் தொல்லை கொடுத்து வந்தது திருச்சியைச் சேர்ந்த 37 வயதான கிஃப்ட் ஜேசுபாலன் செல்வநாயகம் எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். இந்தக் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய செல்போன், லேப்டாப் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து சைபர் க்ரைம் போலீஸார் கூறுகையில், ``கைதுசெய்யப்பட்ட கிஃப்ட் ஜேசுபாலன், திருச்சியைச் சேர்ந்தவர். இவரின் அப்பா ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. இவர் கோவையில் இன்ஜினீயரிங் முடித்துவிட்டு வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்திருக்கிறார். அதனால் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்திருக்கிறார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு இவரின் அப்பாவும் இறந்துவிட்டார். அதனால் வீட்டில் வயதான அம்மாவுடன் தனியாக வசித்து வந்திருக்கிறார். ஒய்வூதியம் மூலம் வாழ்ந்து வந்த கிஃப்ட் ஜேசுபாலனின் லைஃப் ஸ்டைல் கொஞ்சம் கொஞ்சமாக மாறியிருக்கிறது. சமூக வலைதளங்களில் ஆபாச வீடியோக்களை அதிகளவில் பார்த்து அதற்கு ஒருகட்டத்தில் அடிமையாகியிருக்கிறார். இந்தச் சமயத்தில்தான் அமெரிக்காவில் உள்ள நிறுவனத்தில் தலைமை பதவியிலிருக்கும் பெண் ஒருவரின் சமூக வலைதளத்தை கிஃப்ட் ஜேசுபாலன் பாலோ செய்து வந்திருக்கிறார். கடந்த 5 ஆண்டுகளாக அந்த அமெரிக்க பெண் அதிகாரிக்கு ஆபாச வீடியோ மற்றும் பாலியல் ரீதியான மெசேஜை அனுப்பி வந்திருக்கிறார். அதை நிராகரித்து வந்த பெண் அதிகாரி ஒரு கட்டத்துக்கு மேல் பொறுமையை இழந்த அவர், அமெரிக்க தூதரகத்துக்கு தகவல் கொடுத்திருக்கிறார். அதன் பிறகுதான் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் மூலம் எங்களுக்கு புகார் வந்தது. ஐபி அட்ரஸ் மூலம் கிஃப்ட் ஜேசுபாலனைக் கைது செய்திருக்கிறோம்" என்றனர்.