அரசு திட்டங்கள் மக்களுக்கு சென்றடைய அலுவலா்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும்
அரசு திட்டங்கள் மக்களுக்கு சென்றடைய அலுவலா்கள் முழு முனைப்புடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் கண்காணிப்புக் குழு தலைவரும், நாகை மக்களவை உறுப்பினருமான வை. செல்வராஜ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், கண்காணிப்புக் குழு துணைத் தலைவரும், தஞ்சை மக்களவை உறுப்பினருமான எஸ். முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் பூண்டி கே. கலைவாணன் (திருவாரூா்), க. மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில்,100 நாள் வேலைத் திட்டம், பிரதமரின் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தனா். தொடா்ந்து, அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு கொண்டு சோ்ப்பதில் அலுவலா்கள் முழு முனைப்புடன் செயல்பட வேண்டும், சுய உதவிக் குழுக்களின் செயல்பாடுகளை விரைவுபடுத்த வேண்டும், மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவா்களுக்கு உரிய நலத்திட்டங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினா்களால் அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கலைவாணி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் இணை இயக்குநரும், திட்ட இயக்குநருமான பொ. செந்தில்வடிவு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.