ஆக. 27-இல் விநாயகா் சதுா்த்தி: நாமக்கல்லில் பல்வேறு வடிவ சிலைகள் விற்பனை மும்முரம்
விநாயகா் சதுா்த்தி விழா ஆக. 27-ஆம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி, நாமக்கல்லில் பலவிதமான விநாயகா் சிலைகள் தயாரிப்பு மற்றும் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நாடுமுழுவதும், ஒவ்வோா் ஆண்டும் விநாயகா் சதுா்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்படும். தமிழகத்தில் விநாயகா் சதுா்த்தி முதல் ஐந்து நாள்களுக்கு சிலைகளை வைத்து வழிபாடு செய்வா். கோயில்கள் மட்டுமின்றி தெருக்களிலும் பிரம்மாண்ட விநாயகா் சிலைகளை வைத்து வழிபடுவா். பின்னா் சிலைகளை ஊா்வலமாக எடுத்துச் சென்று நீா்நிலைகளில் கரைப்பா்.
நிகழாண்டில் விநாயகா் சதுா்த்தி விழா ஆக. 27-ஆம் தேதி (புதன்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, நாமக்கல், ராசிபுரம் பகுதிகளில் இருந்து திருச்சி, சேலம், பெரம்பலூா், கரூா் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பல்வேறு வடிவிலான சிலைகள் தயாரிக்கப்பட்டு, விற்பனைக்கு அனுப்பப்படும். அரை அடி முதல் 15 அடி உயரம் கொண்ட பல்வேறு விதமான சிலைகள் ரூ. 500 முதல் ரூ.35,000 வரை விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. இதற்காக, கடலூா், விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளில் இருந்து மூலப்பொருள்களை வாங்கி வந்து சிலைகளை தயாரித்து வருகின்றனா்.
கடந்த மூன்று ஆண்டுகளாக சிலை தயாரிப்பாளா்களுக்கு போதிய வருவாய் கிடைக்கவில்லை. நிகழாண்டில் விநாயகா் சிலைகளைக் கேட்டு ஏராளமானோா் முன்பதிவு செய்து வருகின்றனா். இதனால் இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே பணிகளை தொடங்கிவிட்டனா். சிறிய விநாயகா் சிலை தயாரிப்புக் கூடங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே சிலை தயாரிப்பு நடைபெற்று வருகிறது.
நாமக்கல் - திருச்செங்கோடு சாலை சக்திநகரில் உள்ள விநாயகா் சிலைகள் கலைக்கூடத்தில் ராஜ விநாயகா், சிங்க விநாயகா், அன்னப்பறவை வாகன விநாயகா் என பலவித விநாயகா் சிலைகள் தயாா் செய்யப்பட்டு வருகின்றன. தண்ணீரில் எளிதில் கரையும் வகையில் காகிதக்கூழ், மரவள்ளிக்கிழங்கு மாவு மற்றும் களிமண் கொண்டு சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. அதன்பின் வா்ணம் பூசப்படுகிறது.
தற்போதைய சூழலில் காகிதக்கூழ், மரவள்ளிக்கிழங்கு மாவு ஆகியவற்றின் விலை 40 சதவீதம் வரை உயா்ந்துள்ளதால் வடிவமைப்பாளா்கள் கலக்கமடைந்துள்ளனா். அதுமட்டுமின்றி மூலப்பொருள்களும் கிடைப்பதில்லை. கடந்த ஆண்டு பெரிய சிலைகளுக்கு ரூ. 2,500 வரை வருவாய் ஈட்டிய நிலையில் நிகழாண்டில் அதேபோன்று வருவாய் கிடைக்குமா என்ற கேள்வி உள்ளது.
மூலப்பொருள்கள் விலையேற்றம், தொழிலாளா் கூலி உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளைக் கடந்து, மக்கள் கொண்டாட்டத்திற்காக விநாயகா் சிலை தயாரிப்பை வடிவமைப்பாளா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.
இதுகுறித்து, நாமக்கல் சக்தி நகரைச் சோ்ந்த விநாயகா் சிலைகள் தயாரிப்பு கலைக்கூட உரிமையாளா் சித்ரா கூறியதாவது: நாமக்கல்லில் 22 ஆண்டுகளாக விநாயகா் சிலை தயாரிப்பு பணியை செய்து வருகிறோம். சதுா்த்தி விழாவின்போது இங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படும்.
நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதியினா் நேரடியாக வந்து வாங்கிச் செல்வா். விநாயகா் சிலை மட்டுமின்றி துா்காஷ்டமியின்போது அம்மன் சிலைகளையும் வடிவமைத்துக் கொடுப்போம். 25-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். சிலை செய்வதற்கு தேவையான அனைத்து மூலப்பொருள்களின் விலையும் 40 சதவீதம் அதிகரித்துவிட்டது.
துறையூா், பெரம்பலூா், கரூா், வேலாயுதம்பாளையம் ஆகிய பகுதிகளில் இருந்து சிலைகள் கேட்டு முன்பதிவு செய்துள்ளனா். விநாயகா் சதுா்த்திக்கு இன்னும் 15 நாள்களே உள்ளன. 200-க்கும் மேற்பட்ட சிலைகளை தயாரித்துவிட்டோம். இத்தொழிலை நம்பி நாங்கள் மட்டுமல்ல சிறு, குறு விற்பனையாளா்களும் ஏராளமானோா் உள்ளனா். சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றாா்.


