ஆசிரியர் பணியில் தொடர, பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வு கட்டாயம்: உச்ச நீதிமன்றம்
புது தில்லி: ஆசிரியராகப் பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆசிரியர்கள் ஓய்வுபெற 5 ஆண்டுகள் மட்டுமே இருந்தால் அவர்கள் பணியை தொடரலாம் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி திபான்கர் தத்தா உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஆசிரியர்கள் டெட் எனப்படும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை எனில் வேலையை விட்டு வெளியேறலாம் அல்லது சலுகைகளுடன் கட்டாய ஓய்வு பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களில் டெட் தேர்வை கட்டாயம் ஆக்க முடியுமா? அதுபோல செய்தால், சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களின் கல்வி உரிமையை பாதிக்குமா? என்று ஆராயவும் உச்ச நீதிமன்றம் சார்பில் பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று இந்த முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு ஆண்டுதோறும் மத்திய, மாநில அரசுகளால் தனித்தனியாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் தேர்ச்சி பெறுவோர் மட்டுமே ஆசிரியராக பணியில் சேர முடியும் என்ற நிலை உள்ளது.