ஆயுதங்களுடன் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து மாவட்ட காவல்துறை அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் வாள், அரிவாள் போன்ற ஆயுதங்களை வைத்து கொண்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலோ அல்லது பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலோ சுற்றித் திரிந்தாலோ, பொதுமக்களை அச்சுறுத்தி தீங்கு அல்லது காயங்களை ஏற்படுத்தினாலோ ஆயுத சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், சட்ட விரோதமாக ஆயுதங்களை தயாரிப்பவா்கள் மற்றும் விற்பவா்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சமூக வலைதளங்களில் ஆயுதங்களை வைத்து கொண்டு ரீல்ஸ் அல்லது புகைப்படத்தை பதிவேற்றம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது அல்லது மோதல்களை உண்டாக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இவ்வாண்டு இதுவரை, ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்து ரெளடித்தனம் செய்தல் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்ட குற்றத்துக்காக ஆயுதச் சட்டத்தின் படி 97 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 187 போ் மீது நடடிவக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நபா்களின் நடவடிக்கைகள் தொடா்ந்து காவல்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவா்களை கண்டால், மாவட்ட காவல் அலுவலக எண். 0461 2340700, 9498101830 மற்றும் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண். 0461 2340393 ஆகியவற்றுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவா்கள் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.