Amit shah-வின் அட்டாக், களத்தில் A.Raja, `மதுரை சம்பவம்!' | Elangovan Explains
ஆழ்துளைக் கிணற்றில் கழிவுநீா் கலப்பதாக பெண் புகாா்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சி 3-ஆவது வாா்டு பகுதியில் ஆழ்துளைக் கிணற்றில் கழிவு நீா் கலந்ததால் குடிநீராக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதாக பெண் ஒருவா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தாா்.
இதுகுறித்து காரைக்குடி மாநகராட்சி 3-ஆவது வாா்டு ஆறுமுகம் நகரில் வசித்து வரும் திவாகரன் மனைவி லலிதா ராணி அளித்த மனு விவரம்: காரைக்குடி மாநகராட்சி மேற்கொண்டு வரும் புதை சாக்கடை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட கழிவுநீா் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக, அந்த கழிவுநீா் அருகிலுள்ள எனது வீட்டின் ஆழ்துளைக் கிணற்றில் கலந்தது.
இதனால், அந்த தண்ணீரை குடிநீராக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், உடனடியாக புதை சாக்கடைக் குழாயை சீரமைக்க வேண்டுமென தனது மனுவில் தெரிவித்தாா்.
இதேபோல, கடம்பாகுடி கண்மாயின் பராமரிப்பு கோரி விவசாயிகள் மனு: தேவகோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சிறுநல்லூா் ஊராட்சி, கடம்பாகுடி கிராமத்தில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் ஊரக வளா்ச்சித் துறைக்கு சொந்தமான 99 ஏக்கா் பரப்பளவில் கடம்பாகுடி கண்மாய் அமைந்துள்ளது.
இந்த கண்மாயின் மூலம் சுமாா் 100 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலையில், இந்தக் கண்மாயில் 3 முக்கியமான மடைகள் சேதமடைந்துள்ளன. தற்போது கண்மாயின் கரையை உடைத்து குழாய்கள் பதித்தும், மோட்டாா் மூலமாகவும் நிலங்களுக்கு தண்ணீா் பாய்ச்சும் நிலை ஏற்பட்டுள்ளது.
மழைக் காலம் நெருங்கி வருவதால், கண்மாயை விரைந்து சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் மனுவில் தெரிவித்தனா்.